Wednesday, July 23, 2014

பிளேட்டோவின் முட்டை

அன்புள்ள ஜெயமோகன் சார்,
“பிளாடோவின் ரிபப்ளிக்” பற்றிய தங்களின் ஆணித்தரமான கருத்து ரிபப்ளிக்கோ கோழி தானே? :)
பதிலில் உள்ள subtle நகைச்சுவையை ரசித்தேன். நன்றி.
“பின் தொடரும் நிழல்” நான் கிட்டத்தட்ட தினமும் மீண்டும் மீண்டும் வாசிக்கும் நாவல். அதன் முடிவில் ஆறு நதியாவதை (உங்கள் முதல் சிறுகதை போலவே) சொல்லி இருப்பீர்கள். இதுவும் ஒரு subtle ஆன விஷயம். அதற்காக சொன்னேன்.
நன்றிகளுடன்,
கிருஷ்ணன் ரவிக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்
வரலாற்றுக்குப்பையில் விரியும் முட்டைகளே பெரும்பாலான சர்வாதிகாரத்தனமான கருத்துக்கள். சமூகத்தை அறிவுஜீவி மாற்றியமைத்துவிடலாமென்ற கனவு பிளேட்டோவால் முதலில் வரலாற்றுக்குப்பையில் போடப்பட்ட முட்டை
ஜெ

Sunday, July 20, 2014

குசேலன்

எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன்.  ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம்.  புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.  (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும்.  Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று.  Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது.  இவை முக்கியமான மாற்றங்கள்.)

நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்:
  • அதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன.
  • மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும்.
  • புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது.  கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது.  இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன.  காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக்க முடியும்.
  • இரவில் தூக்கமில்லாது இருக்கும்போது வரும் எண்ணங்கள்தாம் எத்தனை அபாயகரமானவை.  ஒருவனைத் தன்னையே முற்றிலும் மறுதலிக்க வைப்பவை.  எதிரியினுடைய எண்ணங்கள் ஏதோ மந்திரசக்தியால் தனக்குள் குடியேறியதுபோல.
  • ஸ்டாலின் சொன்னது மாதிரி ஒரு மனிதர் செத்தா அது துக்கம்.  ஒரு கோடி பேர் செத்தா அது புள்ளி விவரம்.  உண்மைதான் தோழர், ஒரு கோடி துக்கம்னு அதைப் பிரிச்சுப் பாக்க ஆரம்பிச்சா இந்த பூமி துக்கம் தாளாம வெடிச்சிடும்.
  • மனம் பெரிய கல்குண்டு போல கனத்தது.  இறக்கி வைக்க முடியாத பாரம்.  ஏதாவது பேச வேண்டும்.  பேசாதபோது மனதை அணுவணுவாக சுமக்க வேண்டியுள்ளது.  பேச்சு மனதை ஒலியாலான ஒரு திரையால் மூடிவிடுகிறது.
  • மனுஷ மனசில அகங்கார வெஷம் ஏறிப்போன பிறகு மருந்து இல்ல.  தானா பழுத்து எறங்கித் தணியணும் கேட்டுதா?
  • ஒருவேளை அந்தரங்கமான எண்ணங்களெல்லாம் சுயமையம் கொண்ட, அபத்தமான எண்ணங்களாகவே இருக்கும் போலும்.
  • உயிரோடு இருக்கிறவங்களுக்கு இறந்து போனவங்களுக்க கிட்ட ஒரு கடன் இருக்கு.  அவங்க செய்த தியாகங்கள் மேலதான் நம்ம வாழ்க்கை.  அவங்க விதைச்சதை நாம அறுவடை செய்றோம்.
  • ஆம்பிளயளுக்கு என்னமாம் ஒண்ணு இருக்கும் எப்பமும், துரத்திப் பிடிக்கிறதுக்கு.  அதில் உள்ள ஜெயம்தான் அவியளுக்கு முக்கியம்.  பெண்டுபிள்ளியள் அதுக்குப் பிறவுதான்.
  • தன் சொந்தக் குடிமக்கள் மேல வன்முறையப் பிரயோகிக்காத, அவங்களில ஒரு பகுதியை ஒடுக்காத, ஒரு அரசாங்கம் சாத்தியமே இல்லை.
  • எந்த ஒரு சமூகமும் இறந்தகாலத்தை முழுக்க நிராகரிக்கிறதில்லை.  அப்படியே ஏத்துக்கிறதுமில்லை.  தன் நிகழ்காலத் தேவைக்காக வரலாற்றை வேகவச்சு, உலர்த்தி, தூளாக்கி, தனித்தனி பாட்டில்களில் அடைச்சு, பத்திரமா பாதுகாக்குது.  வரலாறு சமூகத்துக்குக் குறியீடுகளின் களஞ்சியம்; அவ்வளவுதான்.
  • பொதுமக்களுக்கு அறிவாளிகளையல்ல, வீரர்களையே வேண்டும்.
  • பொதுமக்களுக்கு அறிவாளிகள் மீது பயம்.  தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம்.  தங்களைவிட வித்தியாசமானவனாக இருக்கிறான் என்ற பயம்.  சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும், சில சமயம் ஏளனமாகவும், சில சமயம் மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.
  • ஆண்களின் பதவியோ, அழகோ, பணமோ, பெண்களை அதிகம் மயக்குவதில்லை.  பேச்சுதான்.  பேசிப்பேசியே ஒருவன் ஒரு பெண்ணின் கண்ணில் மன்மதனாகவும் நவாப் ஆகவும் மாறிவிட முடியும்.
  • எத்தனை தீவிரமான துக்கமாக இருப்பினும் ஒருவர் அழ ஆரம்பிக்கும்போது சற்று கோமாளி ஆகிவிடுகிறார்.  அழுகை நம்மை அவரிடமிருந்து உடனடியாக விலக்கி விடுகிறது.
  • காமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல.  நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஊர்தி அது.  அதில் வேகமூட்டி உண்டு.  ஆனால் நிறுத்தக்கருவி இல்லை.  எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும்.
  • காவிய முடிவுகள் காவியங்களுக்கு வெளியே ஒருபோதும் சாத்தியமாவதில்லை.  எனவேதான் காவியங்களின் தீவிரமோ முழுமையோ ஒழுங்கோ இல்லாமல் வாழ்க்கை வெளிறிக்கிடக்கிறது போலும்.  வாழ்வின் இந்தக் கூசிக் குறுக வைக்கும் அர்த்தமின்மையிலிருந்து தப்பி இளைப்பாறும் பொருட்டு மனிதன் உருவாக்கிக்கொண்டவையே காவியங்கள்.
  • குற்றவுணர்விலிருந்து எழும் கோபம் தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கும் முன்னிலை மனிதர்மீதுதான் உடைத்துப் பாயும்.
  • அர்த்தமற்றதும் உத்வேகம் நிரம்பியதுமான வெற்றுச் சொற்கள் தரும் மெய்மையின் தரிசனத்தை ஒழுங்குள்ள தருக்கம் ஒருபோதும் தருவதில்லை.
  • என் அனுபவத்தில் பசியை வெல்ல மிகச்சிறந்த வழி காமம் சார்ந்த பகற்கனவுகளில் அமிழ்வதும், உடல் சோர்ந்து நரம்புகள் வலிக்கும் வரை சுயபோகம் செய்வதும்தான்.
  • பசியின் மிகப் பெரிய கொடுமை நாம் வேறு எதைப்பற்றியும் உண்மையில் யோசிக்க முடியாது என்பதே.  அதன் முன் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம்.  ஆனால் அனைத்துமே அதற்கு எதிரான பாவனைகளாகவே இருக்கும்.
  • மனிதர்கள் அழுவதும் கோபம் கொள்வதும் எப்போதும் ஓர் இடைவெளியை நிரப்பத்தான்.  பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையேயான இடைவெளி.  சகலவிதமான பேச்சுகளும் தருக்கங்களும் நடப்பது அந்த வராண்டாவில் வைத்துதான்.
  • அகந்தையேகருணையின் விளைநிலம்.
  • குடிக்காமலிருப்பவர்கள் அறிவதில்லை நான் குடிக்காத போதும் குடிகாரன்தான் என.  குடிக்காமலிருக்கும் குடிகாரன்.  அவ்வளவுதான் வித்தியாசம்.
  • ஓர் இலக்கிய விமரிசகனாக வாழ்வைப் பார்க்கும்போது இப்படிச் சொல்லத் தோன்றுகிறது.  மிகமிக நீர்த்துப்போன படைப்பு.  தொண்ணூறு சதத்தை வெட்டி நீக்கிவிடவும்.  மிஞ்சியதில் சிற்சில பக்கங்கள் மட்டுமே முக்கியமானவை.  சில வரிகளில் மட்டுமே உத்வேகம் கூடியிருக்கிறது.
  • சூதாடியின் வாழ்வின் ஒரு கணத்தின் பாரத்தை சம்சாரி தாங்கமாட்டான்.  அவன் முதுகெலும்பு முறிந்துவிடும்.
  • ஆளுமை என்பது ஒரு எதிர்வினை மட்டுமே என்று அறிந்ததே தல்ஸ்தோயின் மெய்ஞானம்.  (ஆளுமை = personality; எதிர்வினை = reaction)
  • அச்சமில்லாத குதூகலம் முழுமையானதல்ல.
  • வெள்ளங்கள் வடியும், இளம்தோழரே.  இளமையில் அதை நாம் அறிவதில்லை.
  • அதிகாரமுள்ள கோழை மிகமிக ஆபத்தானவன்.
  • மனிதனுக்கு மனிதநாடகத்தில் எப்படியாவது பங்கெடுத்தாக வேண்டியுள்ளது.
  • எந்த நிலையிலும் மனிதனுக்கு எதிர்காலம் தேவையாக ஆகிறது.  தற்கொலைக்கு முந்தைய கணத்தில்கூட.
  • சமரசம் செய்துகொள்வதற்கு மிக அவசியமானது உரிய நியாயங்களைக் கண்டுபிடிக்கும் தருக்கத்திறன்.  எனவேதான் அறிஞர்களும் மேதைகளும் எளிதாக சமரசம் செய்துகொள்கிறார்கள்.
  • இளமைப்பருவ நினைவுகள் மனிதனிடமிருந்து பறிக்கவே முடியாத சொத்து.  அவை இருப்பது வரை மனிதர்கள் எங்கும் வாழ்ந்துவிட முடியும்.
  • நீதி என்பது ஒரு நடைமுறை அல்ல; ஒர் ஒழுங்கு அல்ல, ஒரு நம்பிக்கை அல்ல.  நீதி என்பது ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்துகொள்ள முடியாத ஓர் உணர்வு.
  • வரலாற்றில்தான் எத்தனை மாமனிதர்கள், தியாகிகள், புனிதர்கள்.  அவர்களையெல்லாம் புத்தகங்களாகவும் சிலைகளாகவும் மாற்றி அலமாரியில் வைத்துவிட்டுத்தான் மனிதர்கள் பூமியில் வாழ முடிகிறது.
  • அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்துகொண்டவர்கள்.
  • நரகத்தில் கொடும் துயரங்கள் உண்டு குழந்தை.  அதனால் அங்கு இறைவனும் இருப்பார்.  சொர்க்கத்தில் எல்லாவிதமான போகங்களும் உண்டு.  அங்கு சாத்தான் அப்போகங்கள் மீது நின்று பிரசங்கம் செய்வான்.  நீ எங்கே போக விரும்புகிறாய்?
  • ஞானமென்பது இதுதான்.  கற்சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச் சுவர்களாக மாற, உலகம் வெட்டவெளியாகும் நிலை.  அவ்வெட்டவெளியின் நடுவே தனிமையின் சிறையில் நாம் அடைபடுகிறோம்.
  • எப்போராட்டத்திலும் மிகப்பெரிய சக்தி நமது பக்கத்து நியாயத்தின்மீதான ஆழ்ந்த நம்பிக்கையேயாகும்.
  • உரிமைப் போராட்டம் எந்நிலையிலும் மீற முடியாத எல்லை ஒன்று உண்டு.  எந்த உரிமையை அடையும் பொருட்டு அது போராடுகிறதோ அந்த உரிமையை அது ஒருபோதும் பிறருக்கு, தன் எதிரிக்குக்கூட, மறுக்க முடியாது.
  • தருக்கபூர்வமானதெல்லாம் உண்மையென்றும், உரிய காரணங்கள் உடையதெல்லாம் நியாயம் என்றும் நம்புவதே அறிவைப் பேதைமையின் உச்சமாக ஆக்குகிறது.
  • இந்தப் பூமியில் பெரும் அநீதி நிகழாத கணம் ஒன்று இல்லை.  ஆனால் இன்னமும் அநீதியை இங்கு நியாயப்படுத்த முடியவில்லை.
  • பிறிதொருவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தன்னுயிரைத் தரத் தயாராயாகும் கோடானுகோடிப் புனிதமூடர்கள் இன்னும் இப்பூமியில் உள்ளனர்.  அவர்களுக்காகவே இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது.
  • கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன.
  • சித்தாந்தம்கிறது வரலாறு நோக்கி மனித மனம் விரியறதனால பிறக்கிறது இல்லை.  தன்னகங்காரம் நோக்கி சுருங்கிறதனால பிறக்கிறது.  எல்லா சித்தாந்தங்களும் ஒரு உண்மையை ஊதிப்பெருக்கி, மறு உண்மையை மிதிச்சு மண்ணுக்குள்ள அழுத்தித்தான் உண்டாக்கப்படுது.
  • “நீங்களும் சரி, அவுகளும் சரி.  மௌனமா இருக்கிறதுதான் உத்தமம்னு ஆயிரம் பக்கத்துக்கு புஸ்தகம் எழுதுவீக.  எனக்கு ஒண்ணும் புரியலை.”  “தெளிவு படுத்திக்கணும்ல?”  “பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுபடுத்திக்க முடியாது.  தெளிவு இருக்க இடத்தில பேச்சு இருக்காது.”
  • இலக்குகளை அடைந்ததும் வருவது வெறுமை.
  • தீர்க்கதரிசிகள்மீதும், வீரர்கள்மீதும், கவிஞர்கள்மீதும், அறிஞர்கள்மீதும் கவிந்துள்ள தனிமையின் பாரம் தான் அவர்களுடைய சாபம்.
  • எதிர்காலமே நமக்கு வாழ்வின் அர்த்தத்தைத் தர முடியும்.  இறந்தகாலம் பிரமைகளைத் தருகிறது.  நிகழ்காலம் பிம்பங்களைத் தருகிறது.  எதிர்காலம் நம்பிக்கையை, உத்வேகத்தைத் தருகிறது  http://kuselan.manki.in/2012/09/blog-post_5.html

ராஜினியின் விமர்சனம்

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்...... என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக...

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்... அதுவும் "பெண்களுக்கேயுரித்தான" தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்... அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை... அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை.துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
http://peddai.blogspot.in/2005/06/blog-post.html

கெ.ஆர்.அதியமான்

அன்புள்ள ஜெமோ,

பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய உங்கள் பதிவை ( http://jeyamohan.in/?p=97 )
இப்போதுதான் படித்தேன். அதை ஒட்டிய மடல் இது :
மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

///ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை இயல்பாகக்
கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின் மையம். அதை
எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து அளவுக்கே
முக்கியமான குரல்.////

சொத்துரிமை தான் முதலாளித்துவத்தின் ஆணிவேர். பல வகை
அடிப்படை உரிமைகளில் சொத்துரிமை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத உள்ளேன். மார்க்ஸிச‌த்தை எந்த‌ '
முறையில்' அம‌ல்ப‌டுத்தினாலும், அடிப்ப‌டை சொத்துரிமையை ந‌சுக்காம‌ல்
செய‌ல்ப‌டுத‌ முடியாது. சொத்துரிமையை ந‌சுக்கும் போது இத‌ர‌ ம‌னித‌
உரிமை மீற‌ல்க‌ள் மிக‌ இய‌ல்பாக‌ ந‌சுக்க‌ப‌டும். அதை த‌விர்க்க‌வே
முடியாது. செம்புரட்சிக்கு பின் ஸ்டாலின்ஸ‌ம் உருவாகுவ‌தை
த‌விர்க்க‌வே முடியாது.

அலெக்ஸான்ட‌ர் சோல்ஸ்சென்ன்ஸின் (Aleksandr Solzhenitsyn)
சொல‌வ‌து :

..he blamed the teachings of Karl Marx and Friedrich Engels, arguing
Marxism itself is violent. His conclusion is Communism will ALWAYS be
totalitarian and violent, wherever it is practiced. There was nothing special
in the Russian conditions which affected the outcome...
He also rejected the view that Stalin created the totalitarian state, while
Lenin (and Trotsky) had been "true communists." He argued Lenin started
the mass executions, wrecked the economy, founded the Cheka which would
later be turned into the KGB, and started the Gulag even though it did not have
the same name at that time.
இந்த‌ அம்ச‌ம் மார்கிஸ‌த்தின் அடிப்ப‌டை கூறுக‌ளிலேயே உள்ள‌து.
என‌வே ஸ்தாலிய‌த்தை உருவாக்க‌ சாத்திய‌மில்லாத‌ ஒரு
மார்க்ஸிச‌ம் சாத்திய‌மே இல்லை.

சொத்துரிமையும் அற‌விய‌லும் ப‌ற்றி மிக‌ முக்கிய‌ ப‌திவு :
"HUMAN RIGHTS" AS PROPERTY RIGHTS
http://www.mises.org/rothbard/ethics/fifteen.asp
The Ethics and Economics of Private Property
http://www.mises.org/story/1646
அன்புடன்
K.R.அதியமான்
-----------------------------

...ஒரு படைப்பு வாசகனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனை
பேர் எத்தனை முறை வாசிக்கிறார்களோ அத்தனைமுறை அது புதிதாகப்
பிறக்கிறது. சோதிப் பிரகாசம் அவர்களின் வாசிப்பு என்நூலில் இருந்து
அவர் பெற்றுக் கொண்டது. அதை சரி அல்லது தவறு என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை. அவர் கணக்கிலெடுக்கத் தவறிய விஷயங்களை,
அவர் பார்க்காத கோணங்களை சகவாசகனாக நான் சுட்டிக் காட்டலாம்.
படைப்பாளி கூட படைப்புக்கு ஒரு வாசகனே. இனி நான் எதை
சொன்னாலும் அது அந்நாவலின் பகுதி அல்ல. அது முடிந்துவிட்டது.
[விஷ்ணுபுரத்தில் புதிதாக எழுதிச் சேர்க்கப்படவில்லை]

என் நோக்கில் அந்நாவலில் மார்க்ஸியத்தையும் ஸ்தாலினியத்தையும்
துல்லியமாக வேறுபடுத்திப் பார்த்திருப்பதாகவே படுகிறது. அப்படி
வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல்
என்று சொல்லிவிடவும் முடியாது. அது ஸ்தாலினிய எதிர்ப்பு நாவலே.
ஆனால் ஸ்தாலினின் தரப்புகூட வலிமையாகவே சொல்லப்படுகிறது.
அதில் ஒற்றைப்படையாகக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இல்லை.
எல்லா கருத்தும் ஒரு விவாதத்தன்மையுடன்தான் வருகின்றன.
ஆகவே எல்லா கருத்தும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சில தரப்புகள்
தன்னிச்சையான உக்கிரத்துடன் நிகழ்ந்துள்ளன. எஸ்.எம்.ராமசாமி
சொல்லும் மாறாப்பேரறம் குறித்த தரப்பு அதில் ஒன்று. அதற்குச்
சமானமான வலிமையுடன் வருவது ஜோணி என்ற கதாபாத்திரத்தால்
முன்வைக்கப்படும் எதிர்கால மார்க்ஸியம் குறித்த பெருங்கனவு.
அந்நாவல் மார்க்ஸியத்தின் அழிவைப் பற்றி பேசவில்லை, அதன்
மறுபிறப்பைப் பற்றிப் பேசுகிறது

மார்க்சியம் ஸ்தாலினியமல்ல. ஆனால் அது ஸ்தாலினியத்தை
முளைக்கவைத்தது. அரை நூற்றாண்டு காலம் அதை நியாயப்படுத்தும்
கருத்தியல் சட்டகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை எவருமே மறுக்க
இயலாது. பின்தொடரும் நிழலின் குரலின் முக்கியமான வினாவே
அங்குதான் உள்ளது. சில எல்லைகளை நாம் ஒருபோதும்
மீறமுடியாது என எண்ணுகிறோம், சிலவற்றை கற்பனைகூட
செய்யமுடியாது என நம்புகிறோம். ஆனால் உரியமுறையில்
நியாயப்படுத்தப்பட்டால் மனிதன் எதையும் செய்வான் என்றுதான்
வரலாறு நிரூபித்துள்ளது. நாஜி வதைமுகாம்களை நடத்தியவர்கள்
மனிதர்களே. அவர்களுக்கு அவர்கள் செயல் நியாயமாக,
இன்றியமையாததாகப் பட்டது. ஆகவே மனிதன் கருத்தியல்மீது
மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்பதே நாம் இருபதாம்
நூற்றாண்டில் கற்றுக் கொண்ட பாடம். கருத்தியல் எந்த அளவுக்கு
வலிமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலும் கவனமாக இருக்கவேண்டும். எந்த அளவுக்கு முற்போக்காக,
எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலதிகக்கவனம் தேவை. தர்க்கமல்ல, மனசாட்சியே நம்
அளவுகோல்களைத் தீர்மானிக்கவேண்டும். புத்தியல்ல கனிவே
நம்மை வழிநடத்தவேண்டும். அந்நாவலில் உள்ளதாக எனக்குப்
படுவது இதுவே.

இதுவே பின் தொடரும் நிழலின் குரல் பேசும் விஷயம்.
அதைப்பேசும்பொருட்டு இக்காலகட்டத்தில் மிக வலிமையனதாக
இருந்த ஒரு கருத்தியலான மார்க்ஸியம் உதாரணமாக்கப்பட்டுள்ளது,
அவ்வளவுதான். அதன் பிரச்சினை அறத்துக்கும் தர்க்கத்துக்கும்
இடையேயான முரண்பாடு குறித்ததே. மார்க்ஸியமா ஸ்தாலினியமா
என்பதல்ல அதன் சிக்கல். எப்படி ஸ்தாலினியத்தையும் போல்பாட்டின்
கொடூரங்களையும் மகத்தான மனிதாபிமானிகளாக இருந்தவர்கள்
கூட பலவருடம் நியாயப்படுத்தினார்கள் என்பதுதான். [இன்னும்
சொல்லப்போனால் இ.எம்.எஸ் என்ற மேதை, பெருங்கருணையாளன்
எப்படி அதைச்செய்தான் என்பதே என் தனிப்பட்ட சிக்கல்]. 

எப்படிஎந்த ஒரு இலட்சியவாதமும் ஸ்தாலினியம் போன்ற வன்முறைக்களத்தை
உருவாக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அதன் இலக்கு. இலட்சியவாதம்
எதிர்நிலை நோக்குகளை வன்முறையை உருவாக்குமென்றால் அது
மெல்ல தன்னை வன்முறைக்குப் பலிதந்துவிடும் என்பதே. வன்முறைக்கு
அதற்கே உரிய இலக்கணமும் வழிமுறையும் உண்டு என்பதே.
அவ்வகையில்தன் ஆத்மாவின் ஆழத்திலிருந்து பின் தொடரும் நிழலின்
குரலின் வரிகளை வாசித்த பலநூறு ஈழவாசகர்களை நான் அறிவேன்.
ஸ்தாலினியம் தவறாயிற்று என இன்று சாதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் கொல்லப்பட்ட உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களை மீட்டெடுக்க
இயலுமா என்பதே அந்நாவல் எழுப்பும் வினா. 

வன்முறை எங்கு எப்படிநிகழ்ந்தாலும் இந்த அபாயம் உள்ளது. அதை நிகழ்த்தும்போது உள்ள
நியாயங்கள் மாறலாம். நிகழ்ந்தவற்றைச் சரிசெய்ய இயலாது. அப்படியானால்
தியாகங்களுக்கு மதிப்பே இல்லையா? போல்ஷெவிக் புரட்சியில்
இறந்துபோனவர்களின் மரணம் வரலாற்றின் கேலிக்கூத்துதானா? [அதே
வினாவை அப்படியே ஈழத்தைப் பற்றியும் எழுப்பலாம். என்றாவது
அவ்வினா எழுந்துவரும், மிகவலிமையாக. அப்போது என் நாவல்
எதைப்பற்றியதென்ற கேள்விக்கே இடமிருக்காது]. அக்கேள்விக்கே
கிறிஸ்து வந்து பதில் சொல்கிறார்- திருச்சபையின் கிறிஸ்து அல்ல
படைப்பின் ஆன்மாவில் விளைந்த கிறிஸ்து.

ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை
இயல்பாகக் கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின்
மையம். அதை எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து
அளவுக்கே முக்கியமான குரல்.

ஜெ

ரா கிரிதரன்

பெர்லின் சுவர் - பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்

பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் கடந்து விட்டன. மீதமிருக்கும் கற்கள், இன்றும் குறியீடாக மாறாமல், பாதையில் முளைத்த முட்செடிகளாய் ஆங்காங்கே பார்வைக்காக நிற்கிறது. Check Point Charlie என்ற கண்ணுக்குத் தெரியாத சீலையே உண்மையான சுவர். கைகளில் ஒன்றுமில்லாவிட்டாலும், லட்சியம் நிறைந்த வாழ்வை கனவு கண்ட கிழக்குப் பகுதி. அங்கிருந்து தப்ப நினைத்தவர்களின் நிலை பல டெர்ரா பைட்டுகள் நிரம்பும் அவலக் கதை. பொருளாதாரம், உறவு, எதிர்கால திட்டம் என அனைவரும் ஒரே வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். அந்தந்த நொடிக்கு வாழ்வை அனுபவிக்கும் மேற்குப்பகுதி; செழிப்பான வியாபார உலகம். அதை அடைய முற்பட்ட கிழக்குப் பகுதி மக்கள் ஐம்பது ஆண்டுகளாய் சொந்த வாழ்வை இழந்த சோகம், அடுத்த தலைமுறையினருக்கேனும் கிடைக்கப்போகும் செழிப்பான வாழ்வை கனவில் மட்டும் கண்ட திணிக்கப்பட்ட வாழ்வுமுறை.
இன்று, கண்ணுக்குத் தெரியாத வகையில் U2 குழுவினர் , MTV குழுவுடன் எழுப்பிய சுவர் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது (1989இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போது Leonard Bernstein பீத்தோவனின் Ode to Joy இசையை Ode to Freedom என மாற்றி அமைத்தார்).ஒரு விதத்தில் இது சரிதான். வரலாற்றுக்கு தனி அர்த்தத்தைத் தேடிக் கொடுக்கும் செயல். reversal என்ற வகையில், பெர்லின் சுவர் இருந்த Brandenburg வாசலை பரிகாசம் செய்ய வேண்டிய தருணம். இதுவரை பெர்லின் சுவர் என்ற வஸ்து கொடுத்த அர்த்தத்தை புரட்டிப் பார்க்க முடியும். பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டதால் எழுச்சி கொண்ட கருப்பின மக்கள், கருப்பின் அர்த்தத்தை மாற்றிய கதை - இதற்கு ஒரு வழிகாட்டி.
இந்த இருபது வருடங்களாய் சுவருடன் வீழ்ந்தது கம்யூனிசம் என கூப்பாடு போட்டவர்களை என்ன என்று சொல்வது? கண்ணகி சிலையை மீண்டும் நிறுவியதின் மூலம் தமிழ்ப்பற்றை பறைசாற்றியதாய் அறிவித்தவர்களின் நிலையுடன் இதை ஒப்பிடலாம். தத்துவங்களின் செயல்பாடுகள் தோற்கலாம்; தத்துவம் அர்த்தமிழக்குமா? தத்துவத்திற்காகவே வாழ்வைத் தியாகம் செய்தவர்களின் நிலை என்ன? அவற்றின் அர்த்தம் என்ன?
இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் தேட முயன்றிருக்கிறார் ஜெயமோகன்.
இதற்காகவே ‘பின் தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை மீண்டும் படித்தேன். கம்யூனிஸம் என்ற வார்த்தைக்கு பதில் வேறெந்த தத்துவத்தையும் இதில் நிரப்பலாம். அப்போதும் இந்த புத்தகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.
*
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரென்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
இவ்விரண்டு குறள்களும் தியான மந்திரங்களாக மாறி வரலாறு, அரசியல் கொண்ட புனைவை பின் தொடரும் நிழலின் குரலாக சித்தரிப்பதாய் ஜெயமோகன் கூறுகிறார்.இது ரஷ்ய கம்யூனிஸ வரலாற்றின் பின்னணியில் தியாகத்தின் அர்த்தத்தைத் தேட முயலும் ஒரு படைப்பாகும். பின் தொடரும் நிழலை மறுபடி படித்தவும் எனக்குத் தோன்றியவை இவை.
வரலாற்று ஆவணங்கள் நாம் நிற்கும் திசையில் நம்மைக் கடந்து செல்லும் ஆறின் பகுதி மட்டுமே. சில சம்பவங்களின் தொகுப்பைக் கொண்டு வரலாற்றின் பாய்ச்சலை நிறுவும் வீர செயலைத்தான் எல்லா வரலாற்றாசிரியனும் செய்து வருகின்றான். தர்க்க அடிப்படையில் மனிதர்களுக்கான அறம் இதுதான் என பேச முற்படுகையில் வரலாற்றின் காலகட்டத்தையும் பொருட்படுத்த வேண்டியிருக்கிறது.
புகாரின் ஸ்டாலினின் வலது கரமாக செயல்பட்டு 1920 களில் லெனினுக்குப் பிறகு கம்யூனிஸக் கொள்கைகளை நிறுவனமாக மாற்ற செயல்படுகிறார். ஸ்டாலினின் ஆடுபுலி ஆட்டத்தைத் தெரிந்துகொண்டே ஒரு பகடைக்காயாக மாறுகிறார். தனக்கும் செக்மேட் வைக்கப்படும் எனத் தெரிந்தும் ட்ராட்ஸ்கியை நாடு கடத்துகிறார். தன் அறம், பிறர் அறம் என பொலிட்பியூரோவிற்குள் பேசுகிறார். அப்போதைய வழக்கப்படி பொய் வழக்குகளில் சிறை தண்டனைப் பெற்று தன் கடைசி தினங்களை வதை முகாமில் கழிக்கிறார். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு கோர்பசேவின் அரசு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. புகாரின் சொன்ன வாக்குமூலத்தை ஐம்பது வருடங்களாக தினமும் முணுமுணுத்து வந்த அவர் மனைவி அன்னா, கூண்டிலேறி உண்மையை நிறுவுகிறார்.
ரஷ்ய 1917 அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த புகாரினுக்கு நடந்த கதை இது.
வரலாற்றின் திரிபுகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதோர் இருந்த பழைய கம்யூனிஸ்டுகள் காலமது.ஜெயமோகனின் கதைகளத்தில் புகாரினின் பொய் வழக்கு, வீரபத்ரபிள்ளை என்ற இந்திய கம்யூனிஸ்டுக்கு கடிதமாக வந்து சேர்கிறது. அவரும் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த கதையைத் தொடரத் தொடங்க மற்றொரு புகாரினாக மாறுகிறார். இவர் கதையை பல வருடங்களுக்குப் பிறகு தொடரும் அருணாசலம் என்ற ஸ்டாலினிஸ்ட் வழியாக ஜெயமோகன் சொல்கிறார்.
பலவிதங்களில் இந்த நாவல் தமிழின் முக்கியமான படைப்பாகிறது.
மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட கதைகளம். நம் நாட்டில் வரலாறு, அரசியல் பற்றி பலவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன. அரசியல் என்றாலே சாக்கடை என்ற க்ளீஷேக்களிலிருந்து, அதன் பன்முகத்தை வரையறுக்கும் விமர்சனங்கள் வரை இந்த கண்ணோட்டங்கள் மாறுபடும்.இதைப் போலவே இந்த நாவலில் வரும் பாத்திரங்களும் பலவிதமானவை. தீர்க்கமான சில அடிப்படை கற்பிதங்களை உடைய பல சித்தாந்தவாதிகள், அருணாச்சலம் போல் செயல்வீரனாகவும் சித்தாந்தியாகவும் உள்ள சில பாத்திரங்கள் என முரண்பாடுகள் கடைசி வரைத் தொடர்கிறது.
நாவல் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி - கம்யூனிஸம் அழிந்து விட்டது. ஆனால் பல மனிதர்களின் தியாகங்களில் கட்டப்பட்ட இந்த தர்க்க சித்தாந்தம் இன்று எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது? சோஷலிஸ உலகம் என்ற கனவு உடைபட்டு விட்டது. ஆனால், இதைத் தொடர்ந்த மனிதர்களின் தியாகங்களுக்கு பதில் என்ன?
மிக ஆழமான, விரிவான பதில்களுக்கு தயாராகும் அதே நேரத்தில், இவை அனைத்தும் நேர விரயம் என்பதும் தோன்றாமலில்லை. இந்த இரு முடிவுகளும் மாறி மாறி நமக்குத் தோன்றிக்கொண்டிருக்கின்றன. யேசுவைப் போல் தியாகம் செய்தாலும் மூன்று நாட்களில் மறுபடி உதயமாகி உண்மையை உலகுக்கு உணர்த்தலாம். இது தான் தியாகத்தின் உச்சகட்ட பதிலா?
அறம், தியாகம் போன்றவை திசைக்கொன்று போல் மாறிக்கொண்டிருக்கும் பறவை. உயர பறக்கும் கொடியைப் போல் திசை மாறினால், இதன் புத்தியும் மாறிவிடுமா? நிகழ் காலத்து தராசைக் கொண்டு, கடந்த காலத்து நிகழ்வுகளை எடை பார்க்க முடியுமா? இவை எவ்விதமான அபத்தமான விளைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்? இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கையில் நாம் சுலபமாக அறம்,தியாகம் போன்றவற்றை புறம் தள்ள முடியும். தேவையில்லாத கனம் போல் தோன்றினாலும், வரலாற்றை கணிக்கும் கருவியாக  இவை நமக்கு இருக்குமா? அப்படிபட்ட தராசே தேவையில்லை என்றால் வரலாறு என்ற ஒரு வஸ்து எதற்கு?
வெற்றியாளர்களால் பிண்ணப்படும் போர்வை என வரலாற்றை ஒதுக்க முடியாது. பல ஆவணங்களிலும், தொகுப்புகளிலும் நமக்கு கிடைக்கும் கண்ணோட்டங்களை வரையறுக்கலாம். மனிதர்களாக நாம் இவற்றை பார்வையாளனாகவோ, நிகழ்த்தும் கருவிகளாகவோ மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவு சரியாக இருக்குமா?
எந்த காலகட்டத்திலும் அரசியல் சகுனிகளும், தலைவர்களும் தங்களின் கூர்மையான தந்திர மூளையால் வரலாற்றை ஏமாற்ற புதுப்புது  யுத்திகளைக் கண்டு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டாலின் புகைப்படக் கலையை சாதகமாகப் பயன்படுத்தி, பல தலைவர்களை ரஷ்யாவில் இல்லாமல் செய்திருக்கிறார். தன் வாழ்நாளில் இவை வெளிவராமலிருக்க ஜப்பானைப் போல் மாய உலகைச் சித்தரித்தார்.ட்ராட்ஸ்கி, புகாரின் போன்ற மென்ஷ்விக்குகள் பலரை நாடு கடத்தியிருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டனர்.
1989ல் பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட போது இந்த கற்பனை உலகமும் பலருள் சிதறியது. இந்த வருடம் கம்யூனிஸம் வீழ்ந்து இருபது வருடங்களாகிறது. இப்படித்தான் ஊடகங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் பதியப்படும். இது சரியானதா?
கம்யூனிஸம் என்ற அரசியல்/வாழ்வு முறையை பின்பற்றிய நாடு வீழ்ந்தால், கம்யூனிஸம் என்ற சித்தாந்தமே வீழ்ந்ததுபோலாகுமா? சித்தாந்தம் என்பது கடவுள்,உண்மை என்பவைப் போல் நிதர்சனமான ஒன்றில்லையா? கம்யூனிஸம் என்பது மார்க்ஸ்,ஏங்கள்ஸின் சித்தாந்தமல்லவா; ரஷ்யா அதை நடைமுறைபடுத்தப்பட்ட முயன்ற நாடு; ஸ்டாலின்,லெனின் போன்றோர் அதன் கருவியல்லவா? இவர்கள் உபயோகித்த வழிமுறைகளில் தவறிருக்கலாம். அதனால் சித்தாந்தம் ஆட்டம் காணுமா?
ஒரு சமூக இயக்கத்தை வழி நடத்த பல முறைகள் இருந்து வந்திருக்கின்றன. எந்த இயக்கமானாலும் மாற்று கருத்துக்கும், மக்கள் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும். அப்படி இருக்கும் இயக்கங்கள் மட்டுமே கொஞ்சமாவது உயிரோடு இருந்திருக்கின்றன. குடியரசு முறையில் தேர்தல் feedback forum. அப்படிபட்ட கருத்து சுதந்திரமில்லாதது கம்யூனிஸத்தின் அடிப்படை பிரச்சனையாக இருந்திருக்கிறது. மையத்தை தகர்க்கும் இயக்கத்தில் மையத்துக்கே முக்கியத்துவம் அதிகமானது கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய முரண்.
இந்த இருபது வருடங்களில் இப்படிப்பட்ட பல கருத்துகள் ஊடகங்களிலும், புத்தகங்களிலும் வெளி வந்திருக்கின்றன. சித்தாந்தத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும், கூட்டாட்சி என்ற இயக்க முறை கையோங்கியே இருக்கிறது.
ஒரு புனைவு வாசகர்களை சிந்திக்க வைப்பதோடு பல சாத்தியக்கூறுகளுக்குள்ளும் இட்டுச் செல்லவேண்டும். இப்படிபட்ட பல முக்கியமான கேள்விகளை முன்வைக்கும் மிக அற்புதமான அரசியல், வாழ்வு சம்பந்தமான அனுபவமாக இந்த புத்தகத்தை ரசிக்கலாம்.

ஐ சிவக்குமார் விமர்சனம்

தமிழகத்தில் சோவியத்தின் தகர்வுக்குப் பின்னால் கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சங்கத்தின் வரலாற்றை இந்நாவல் பதிவு செய்கிறது. நாவலின் மையப் பாத்திரமான அருணாசலம் தொழிற்சங்கச் செயலராய் இருக்கிறான். இவன் ஸ்டாலினிசத்தைத் தன்னுடைய நெறியாகப் பின்பற்றுகிறான். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தொழிற்சங்கத்தில் பணிபுரிந்த வரும் நல்ல வாசிப்பாளரு மான வீரபத்திரன் எம்.ஏ. பற்றிக் கேள்விப்படுகிறான். அவர் தொழிற் சங்கத்தினரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒரு சந்தை வீதியில் பசியால் உழன்று இறந்துபோன தகவலை ஆறுமுகம் அறிகிறான். வீரபத்திரன் பற்றிக் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர். எஸ்.கே.எஸ். போன்ற தலைவர்கள் அவரைப் பற்றிய ஆவணங்களையே இல்லாமலாக்குகின்றனர்.
ஆறுமுகம் வீரபத்திரனைப் பற்றிய தேடலின் மூலமாக அவருடைய எழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கிறான். அப்போது தான் வீரபத்திரன் ட்ராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களின் பக்கம் இருந்துகொண்டு ஸ்டாலினை விமர்சித்தவர் என்பதை அறிகிறான். ஸ்டாலினை விமர்சித்ததனாலேயே பலரின் தாக்குதலுக்கும் ஆளானார் என்ற தகவலும் கிடைக்கிறது. புகாரின் வாழ்வைப் படிப்பதனால் வீரபத்திரன் அடைந்த குழப்பம், ரஷ்யா மீது அவரடைந்த அதிருப்தி, மனித வாழ்வின்மீது அவருடைய பரிதாபம் எல்லாம் ஆறுமுகத்தையும் தொற்றிக்கொள்கிறது. இந்தச் சமயத்தில் தமிழக மார்க்சிய, எதிர் மார்க்சியம் குறித்து ஞானி, சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலானோர் நாவலின் இடை யிடையே வந்து மார்க்சியம் குறித்து விவாதிக்கின்றனர். இந்தத் தளங்களில் பேசப்படும் விவாதங்களும் வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து கதைத் தலைவனைப் பைத்தியமாக்குகின்றன. சில வருடங்கள் மனநிலைக் காப்பகத்தில் இருக்கிறான். பின்னர் ஓரளவு கருத்து ‘தெளிவு’ கொண்டபின்னர் தன் மனைவியுடன் கோவிலுக்குச் சென்று சிவலிங்க தரிசனம் பெறுகிறார். பின்னரே அவன் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுவதாக நாவல் முடிகிறது.
 ஜெயமோகன் இந்நாவலில் மார்க்சியத்துக்கு எதிரான விவாதங்கள் மூலம் மார்க்சியக் குறைப்பாட்டைப் புலப்படுத்தி ஆன்மீகத்தை வலிந்து நிலைப்படுத்துகிறார். மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் ஸ்டாலின் மற்றும் மார்க்சியம் குறித்துச் சித்திரித்த கருத்துகளை உள்வாங்கி, வாசகனை ஈர்க்கும் மொழி தலுடன் ஜெயமோகன் நாவலை உருவாக்கியுள்ளார்.
மே 1937ஆம் ஆண்டு ஜான் டெவே தலைமையில் அமெரிக்கா வில் உள்ள ட்ராட்ஸ்கியவாதிகள் டெவே குழுவை அமைத்தனர். இதன் பணி ட்ராட்ஸ்கி புனிதமானவர் என்பதை நிறுவுவதாகும். இக்குழுவின் அறிக்கைகளைக்கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல் எனும் கருதுகோளும் உண்டு. ஜெயமோகன் ரஷ்யா, ஸ்டாலின் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றையே மார்க்சிய மாகச் சித்திரிக் கிறார். ரஷ்யா மற்றும் ஸ்டாலின் மூலம் மார்க்சியத்தின் வீழ்ச்சியையும் அதிகாரத்தையும் நிறுவிச் சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் ‘முக்தி’ மார்க்கத்தை ஜெயமோகன் தீர்வாகக் கூறியுள்ளார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12226:---1999&catid=1237:2010&Itemid=499

தர்மம் மறுபடியும் வெல்லும் - முத்து

here are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)
“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:
ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.
***
ஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா?
இன்றைய பாம்ப்லட்(pamphlet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர்? அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற! என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல அல்ல.
வாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.!) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா? பிடிக்கவில்லையா? குழப்பமாக இருக்கிறதா? தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.
நான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு!) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்!) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்!) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
***
தை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.
புகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.
இதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக குரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.
கேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.
அருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.
வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது!). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.
இது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.
***
னால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லை நிழல் என்பது வரலாறா? நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா?
***
நாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.
***
ம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா? ஸ்டாலின் என்னதான் சாதித்தார்?
ஸ்டாலினால கம்யூனிசத்துக்க அடிப்படையான நிலச் சீர்திருத்தத்தையே நடைமுறைப் படுத்த முடியல. ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொண்ணுபோட்டு விவசாய அமைப்பையே நாசம் பண்ணினது தான் பலன். அவர் காலத்தில தான் உலகத்திலேயே பெரிய தானியக் களஞ்சியங்களில ஒண்ணான உக்ரேய்னில பஞ்சம் வந்து பல லட்சம் பேர் இறந்தாங்க. இன்னைக்கும் உக்ரேன் மீளலை.
இன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா? தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.
நம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்
சொல்லித்தாறம்? இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே? என்னடே எவனாவது இருக்கியளா?
சரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.
சிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்ம சொத்த நாம எடுத்துக்கிட்டா
என்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்? இன்னும்
பெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா? சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ? சொல்லு?
நாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்? மனதைத் தொட்டுச் சொல்லு.
நாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம்? வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம்? பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்?
நீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்
நெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சில
அதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்
மரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.
கதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:
மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட
அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட
மோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு. ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனை
வருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும்
அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.
இன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்
காட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்
மிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.
கொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே!
முற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே? மக்கள் தானே கட்சி!
அருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:
இவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு
அப்படியா?! நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை? ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை? கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ?
ஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:
பிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூடும்.
நான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது!
அருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:
அம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க. ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா? அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரே
ரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்
அட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க?
கட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனா
யாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களில
சொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.
தருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.
வீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:
ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது? அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர? தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.
உனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.
என்னை மிகவும் பாதித்த கவிதை:
இன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,
இழிந்த விலங்கும் அல்ல, மனிதனும் அல்ல
இனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…
-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை
புகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே! புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.
அதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இல்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.
கீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:
பிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.
மிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.
ஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியே
எட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள்! அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.
ரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.
வீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.
கடிதங்கள்
தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.
இந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை!) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை? விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே! இங்கு அவர்களை மூடிக்கொள்ளும் பனி என்பது சர்வாதிகாரம். மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை அவர்கள் உடைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடக்குமுறைகளை கட்டுகளை அவிழ்த்தெரிந்துகொண்டேயிருக்கிறார்கள், மீண்டும் வேறு புதிய கயிறால் கட்டப்படும் வரை.
யாருக்காக
யாருக்காக எழுதப்படுகின்றன கவிதைகள்?
இன்னும் சூரியன்
உதிக்கிறது
ஒளிபட்ட பனிப்பாறை போல
அவ்வளவு கடும் குளிருடன்.
எலும்பைத்
துளைக்கும் அதன் புன்னகை
மலர்கள் மலர்கின்றன.
தொடும்போதே உதிர்கின்றன.
இன்னும் மிச்சமிருக்கின்றன என நான்
அள்ளியள்ளித் திரட்டும் நம்பிக்கைகளை
உடைக்கிறது தூரத்து ஓலம்.
கையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்
இந்தச் சிறுகுழந்தை கேட்கவில்லை
யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்
இக்
கவிதைகளை என்று.
கேரள தலித் தலைவர் ஐயன்காளியும் காந்தியும் சந்தித்திக்கொண்டதாக சொல்லப்படுகிற கதை ஒன்றும் இடம்பெறுகிறது. காந்தியின் அகிம்சை நன்றாக அலசப்படுகிறது.
ஸ்டாலின் செய்தது தவறு என்றால் எங்கே தவறு நடந்தது?
மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளால இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டுவந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சு பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.
இன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்ல. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தல. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத்
தலைமேலே தூக்கி வெச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதில கூட
ஏகாதிபத்திய விஷம் கலந்திருக்கு.
மார்க்ஸிசத்தில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா? மார்க்ஸிசத்தவிட தீவிரமான ஒரு போராட்ட ஆயுதம்
கிடைக்கிற வரை மார்க்ஸிசத்தை உலகம் கைவிட முடியாது. ஏன்னா மார்க்ஸிசம் ஒரு
எதிர்ப்பு சக்தி.
ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வது எப்படி? என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள்! நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ! ரிபப்ளிக்கோ!” என்று கூவுகிறது.
***
னக்கு கம்யூனிசம் தெரியாது. நான் கட்சி சார்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த நாவல் எனக்கு கம்யூனிசத்தின் வேர்களை அறிய உதவியிருக்கிறது. கம்யூனிசத்தைப் பற்றிய நன்மைதீமைகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. என் மனமும் புத்தியும் திறந்தேயிருக்கிறது. நான் கம்யூனிசத்தை சார்ந்தவனும் அல்லன். முதலாளித்துவத்தை சார்ந்தவனும் அல்லன். நான் கிடைக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் எந்த நிலைப்பாடுக்கும் வரமுடியவில்லை. இந்த நாவலைப் படித்த கம்யூனிஸ்ட் எவரும் கண்டிப்பாக கடும் கோபம் கொள்வார்கள். இல்லையேல் கோபம் கொள்வதைப் போன்று நடிக்கவாவது செய்வார்கள். வேறு என்ன செய்ய முடியும்? கம்யூனிசமும் கட்சிதானே? அதை நம்பியும் மக்கள் இருக்கிறார்களே? அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா? கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே! இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா? கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா? அப்படி இழக்கத்தான் வேண்டுமா? இழந்தால் மட்டும் நாம் என்ன சாதித்து விட முடியும்? இழக்காமல் என்ன சாதிக்கிறோம்? வரலாறு நாம் இழந்தாலும் இழக்காவிட்டாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எண்ணற்ற உயிர்களை தனி மனித கொள்கைகளுக்காக பலிவாங்கிக்கொண்டேதான் இருக்கிறது.
சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குளக்குகள் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் சொல்லும் போது: “அவர்களை கட்டாய உழைப்புக்கு அனுப்பி வைத்தோம். உழைக்கச்சொன்னால் யாவருக்கும் கஷ்டம் தான்” என்று வாதிடுகிறார். ஒரு விஷயத்தில் இரு வேறு விதமான பார்வைகள் எப்பொழுதுமே இருக்கின்றன. ஒருமுகமாக அல்லது ஒருசார்பாக ஒரு விஷயத்தை அனுகினால் அதன் உண்மையை நாம் அறியமுடியாமல் போய் விடும். Have an un-biased-view!
***
மேலும் படிப்பதற்கு வேறு சுட்டிகள்:
புகாரின்:
http://en.wikipedia.org/wiki/Nikolai_Bukharin
http://art-bin.com/art/obukharin.html
http://www.marxists.org/archive/bukharin/works/1938/trial/index.htm
http://www.fee.org/publications/the-freeman/article.asp?aid=545
புகாரினின் மனைவி:
http://en.wikipedia.org/wiki/Anna_Larina
ஸ்டாலின்:
http://en.wikipedia.org/wiki/Stalin
குளக்குகளும் சைபீரியா வதைமுகாம்களும்:
http://en.wikipedia.org/wiki/Kulak
http://www.economicexpert.com/a/Kulak.htm
கேரளாவின் அய்யன்காளி:
http://en.wikipedia.org/wiki/Ayyankali
ரணதிவே:
http://www.citu.org.in/btr%20.htm
கவிஞர் புஷ்கின்:
http://en.wikipedia.org/wiki/Aleksandr_Pushkin
எழுத்தாளர் குப்ரின்:
http://en.wikipedia.org/wiki/Alexander_Kuprin
தச்ஸ்தோய்:
http://en.wikipedia.org/wiki/Tolstoy
நன்றி
http://www.kuralvalai.com/2007/04/blog-post.html
வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)