Wednesday, September 17, 2014

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.

அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது. 

வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின்பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரதுகரைந்த நிழல்கள்ஒற்றன்தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும். 

எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?

கம்யூனிசம் சார்ந்த கதைகள் என்று என் நினைவில் வருவது வெகு சில கதைகளே. ஜெயகாந்தனின் ஒரு கதை. ஒரு தவறான ஊழியனுக்காக போராடும் சங்கம், அதை எதிர்க்கும் சங்க ஊழியன். கடைசியில் அவனும் அவர்களுடன் சேர்ந்து கொள்வான். புலிநகக் கொன்றை. ஜெயகாந்தனின் கதையில் சில மெல்லிய விவாதங்கள் உண்டு. புலிநகக் கொன்றை லேசாக தொட்டு செல்லும். இந்த நாவல் அதை விவரித்து, விளக்கமாக பேசுகின்றது.

ஜெயமோகனின் பல கதைகளில் வருவது அடிப்படையான மானுட அறம் பற்றிய கேள்விகள். இதிலும் அவை இருக்கின்றன, நாவல் அதை பற்றி விரிவாக பேசுகின்றது. ஒரு அரசன் என்பவன் எப்படி நடந்து கொள்ள  வேண்டும் என்பதை பற்றி பல கதைகள், அறிவுரைகள் பாரதத்தில் இருக்கின்றன. அதில் பலவற்றை படித்தால் மிகவும் கொடூரமானதாக தோன்றும் ஆனால் அது அனைத்தும் கூறுவது தன் மக்களை அவன் நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த நீதியும் தன் நாட்டு மக்களை கொன்றழிக்க சொல்லவில்லை. ஆனால் தன் மக்களை கொன்றழித்த தலைவர்கள்தான் அதிகம். ஸ்டாலின், மாவோ, போல்பால்ட். 

கம்யூனிசம். கால் வைத்த இடங்களிலெல்லாம் அழிவை தந்த ஒரு சிந்தாந்தம். ஒன்றுக்கொன்று முரண்படும் சக்திகளால் முன்னேறி செல்லும் வரலாறு, ஒரு கட்டத்தில் தானாக புரட்சியில் சென்று முடியுமென்பது கம்யூனிச மதத்தின் வேத வாசகம். கம்யூனிசம் உண்டாக்கிய அழிவுகளை பற்றி ஏற்கனவே அரவிந்தன் நீலகண்டனின்பஞ்சம் படுகொலை பேரழிவு நூலில் படித்திருக்கின்றேன்.  அதில் பல புள்ளிவிவரங்களுடன் கம்யூனிசம் உட்கொண்ட பலிகளை பற்றி எழுதியுருந்தார். இந்த நாவல் அப்படி பலி கொள்ளப்பட்ட பல கோடி உயிர்களின் ஒருவரை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது.

இந்த நாவல் கம்யூனிசத்தை அடிப்படையாக வைத்து அரசியல் பற்றி பேசும் நாவல். இதே களத்தில் வேறு பல இசங்களையும் வைக்கலாம். கண் முன் பல அழிவுகளை கண்டு வருகின்றோம். இலங்கையில், பாகிஸ்தானில், பங்களாதேஷில், ஆப்கானிஸ்தானில். ஆயுதம் பலம் பெறும் போது, மக்கள் அடிபடுகின்றார்கள். 

ரஷ்யாவில் நடந்தது கம்யூனிச புரட்சி; அது ராணுவ புரட்சி கம்யூனிச புரட்சியாக மாறியது; ராணுவ புரட்சி கம்யூனிச புரட்சியாக காட்டப்பட்டது; ராணுவ புரட்சியல்ல மக்கள் புரட்சி, அது கம்யூனிச புரட்சி; கம்யூனிச புரட்சி ஆனால அது மார்க்ஸ் சொன்ன புரட்சியல்ல.இது போல பல பாஷ்யங்கள் உண்டு. உண்மையான கம்யூனிசம் என்பது வரவேயில்லை, கம்யூனிச நாடுகள் அனைத்தும் அதை பரிசோதனை செய்து பார்த்துள்ளன அவரவர் வழியில். லெனினிசம், மார்க்ஸிசம், ஸ்டாலினிசம், மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் என்று பல வழிகள். சேர்ந்த இடம் ஒன்றே. உயிர்பலி. 

அருணாச்சலம் ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் உப தலைவர். கே.கே. எம் தலைவர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கணக்கின் படி கே.கே.எம் இடத்திற்கு அருணாச்சலம் வருகின்றான். அதே சமயம் அவனுக்கு வீரபத்திரபிள்ளை என்பவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், நாடககங்கள் கிடைக்கின்றன. கட்சியிலிருந்து விரட்டப்பட்டதுமன்றி, கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்ட அவரின் எழுத்துகள் அருணாச்சலத்தை அலைகழித்து அவனையும் கட்சியிலிருந்து விரட்டுகின்றது.

அருணாச்சலம், வீரபத்ர பிள்ளையை கட்சி புறக்கணித்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றான். ஒன்று இயல்பாக ஒருவனுக்கு தோன்றும் உணர்வு, அநீதி இழைக்கப்பட்ட மனிதனிடம் வரும் உணர்வு. இரண்டாவது அவனை கட்சியுடன் பிணைத்து கொண்டு, கட்சியின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொள்வதால் வரும் குற்ற உணர்வு, அதோடு கே.கே.எம்ஐ கட்சியிலிருந்து விலக்கியதன் காரணமாக வரும் குற்ற உணர்வு. இவை அனைத்தும் அவனை மனப்பிறழ்வில் தள்ளுகின்றது. ஒரு கட்டத்தில் தன்னை வீரபத்ரபிள்ளையாகவே நினைக்க ஆரம்பிக்கின்றான்.

வீரபத்திரபிள்ளையை விரட்டியது அதே போல் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்ட புகாரின். புகாரின் நிழல் வீரபத்திர பிள்ளையையும், வீரபத்திர பிள்ளையின் நிழல் அருணாச்சலத்தையும் பின் தொடர்ந்து அவர்களை மனம் பிறழ செய்கின்றது. 

அவதூறு. பலருக்கு வலிமையான ஆயுதம். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு முதன்மையான ஆயுதம். யாரையும், எதையும் விமர்சிப்பது மூலம் மட்டுமே அனைத்தையும் சாதித்து விட முடியும் என்ற நம்பிக்கை. படிக்கும் போதே உடனே ஒரு எதிர்மறை அலைகள் நம்மை வந்து சூழ்ந்து கொள்ளும். நாம் வாழும் உலகம் ஒரு நரகம், அனைவரும் அயோக்கியர்கள் என்ற எண்ணம் வலுப்படும். தரம் தாழ்ந்த விமர்சனங்கள், எதையும் எள்ளாலாக பேசி எதிராளியை அடிப்பது, முடிந்தால் அவர்களது தனிப்பட்ட வாழ்வு, சாதி, மதம், வீட்டில் வளர்க்கும் நாய் முதல் இழுத்து போட்டு அடிப்பது. அதுவே புகாரினையும், வீரபத்ர பிள்ளையையும், அருணாச்சலத்தையும் சாய்க்கின்றது.
பெரும்பாலான கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கு கம்யூனிச தத்துவம் முழுவதும் தெரியுமா? இருக்காது. அவர்களுக்கு இருப்பது மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆசை. அதை கம்யூனிசத்தின் மூலம் செய்யலாம் என்ற நம்பிக்கை. கே.கே.எம் அந்த வகையில் ஒருவர். மலை மலையாக ஏறி, தொழிலாளர்களை இணைத்து அவர்களின் நலனுக்காக அமைத்த சங்கம், இன்று அவர்களுக்கு ஒரு அடியாள் போலவும், அரசியல் பேரம் பேச உதவும் ஒரு இயக்கமாகவும் இருக்கின்றது. இதை மாற்ற முயலும் போதே அவருக்கு காலம் மாறியது தெரிந்து கடைசியில் பக்தியில் விழுகின்றார். அருணாச்சலமும் அங்கே சேர்கின்றான், வீரபத்ர பிள்ளையின் கதையில் வரும் புகாரினும் அங்கேயே சேர்கின்றார்.

பெண்கள் நடத்தும் புரட்சி பற்றி கனவு காண்கின்றான் அருணாச்சலம், பெண்கள் கையில் அதிகாரம் இருந்தால் கனிவு இருக்கும் என்று நினைக்கின்றான். இக்கதையில் பெண்கள் மிக குறைவு. அருணாச்சலத்தின் மனைவி. மிகவும் எளிமையான பெண். உண்மையில் அருணாச்சலத்தின் வெற்றிகள், சிந்தாந்தங்கள் எல்லாம் அந்த எளிமை முன் தோற்று விடுகின்றன. அவளே அவனின் தோல்வியிலிருந்து அவனை மீட்டு வருகின்றாள். அன்னா, புகாரினின் மனைவி. உண்மை கதாபாத்திரம். எளிமையுடன், வலிமை. பல ஆண்டுகாலம் சைபீரிய வதை முகாம்களில் வதைபட்டும், தன் மனநிலையை தவற விடாது, புகாரினின் வாக்குமூலத்தை உலகிற்கு தந்த பெண். அவள் புகாரினை வரலாற்றிற்கு மீட்டு தருகின்றாள். உண்மையில் இவர்கள்தான் வலிமையானவர்கள். 

மக்களுக்காக உண்மையில் உழைக்க நினைத்து கட்சியில் சேர்பவர்கள் ஒரு வகையில் செயல்பட்டுகொண்டுதான் இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு பின், அவர்கள் கட்சி சட்டத்திற்குள் மாட்டி கொண்டு, அதையும் சேர்த்து காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். கட்சி அரசியல். இன்றும் பல பழைய ஆட்கள், கட்சி மாறி ஓட்டளிக்க மாட்டார்கள், காரணம் அவர்களது மனமே அதை ஒரு வீழ்ச்சியாக பார்க்கும், அவர்களின் தோல்வியாக பார்க்கும். அவர்களால் அதை விட்டு விட முடியாது, அப்படி செய்தால் அவர்களின் இது நாள் வரையிலான உழைப்பை அவர்களே வீணடித்தது போலத்தான்.அதை ஒத்துகொள்ள தைரியமில்லாதவர்கள் அதன் தலைவர்கள். அதற்கு ஒரு தைரியமும், அற உணர்வும் வேண்டும். அது காந்திக்கு மட்டுமே இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

காந்தியை பற்றி பலர் திட்டுவதுண்டு, கம்யூனிஸ்டுகளூக்கும் அதிக மரியாதை கிடையாது என்றுதான் நினைக்கின்றேன். எனக்கும் கூட அவர் மிகவும் சாத்வீக வழியில் சென்றார், இன்றைய உலகிற்கு அது சரிப்பட்டு வராது என்று நினைப்பு ஒரு ஓரத்தில் உண்டு. மிகவும் மெதுவாக நடக்கும், ஆனால் எந்த பின்விளைவையும் தராத ஒன்று அவர் வழிமுறை. ஒவ்வொரு தனிமனிதனுடனும் உரையாடுவது அவர் பாணி, தனி மனிதனின் ஒழுக்கமே ஒரு சமூகத்தின் ஒழுக்கமாக மாறும். அதையே அவர் முயற்சித்தார். ஒரு வகையில் அதுதான் இந்திய மக்களை இன்னும் கொஞ்சம் மனிதத்தன்மையுடன் வைத்திருக்கின்றது. அவர் விட்டதை செய்யாத குற்றம் அவருடையதல்ல. ஆனால் கம்யூனிசம் தனி மனிதன் என்பதை கணக்கில் கொண்டதாகவே தோன்றவில்லை. அதன் விளைவு அதன் தோல்வி. 

ரஷ்ய புரட்சியின் முதல் அறப்பிறழ்வு, ஆரம்பத்திலேயே துவங்கிவிட்டது. ஜார் குடும்பத்தை கொன்றதிலேயே அவர்களின் மனித உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. நாயை கூட கொல்லும் அந்த உணர்வு, அவர்களை எதையும் செய்ய வைத்துவிட்டது. ஹிட்லரை போல. குற்ற உணர்வு என்பதே இல்லாமல். ஜார் மன்னர் எதிரி என்றால், அவரது நாய் மேல் வர்க்க நாய் போல. இந்த ஆரம்பமே, கொத்து கொத்தாக மனிதர்கள் நாற்றங்காலில் இருந்து பிடுங்கி நடுவது போல, எங்கிருந்து எங்கேயோ மாற்றி விளையாடினார்கள். குழந்தைகளையும் கட்டாய உழைப்பு முகாமில் வைத்து வதைத்தனர். 

புகாரினும் இந்த ஆட்டத்தை ஆடியவரே. தோற்றவர். ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட் ட்ராட்டஸ்கியை கொன்ற அதே பனிக்கோடாரி, இவருக்கு தூக்கு கயிறாக மாறியது. ஆனால், புகாரின் இறப்பதற்கு முன் தாங்கள் உண்டாக்கிய அழிவு எத்தகையது என்பதை உணர்ந்து கொண்டார். தனிமனிதர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவர்களை ஒரு இயந்திரம் போல இயக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் முன் பல கோடி பலிகள். அதை மாற்ற முயற்சித்த போது, காலம் கடந்து அவருக்கு செக் மேட்.

புகாரினின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சில சிறுகதைகள் மூலம் காட்டுகின்றார். புகாரின் பனியில் எழுந்து மீட்பரை தேடி போகும் காட்சி மனதை மிகவும் சங்கட படுத்திவிட்டது. அக்காட்சியில் வரும் குழந்தைகள். குழந்தைகள் மட்டுமே வன்மம் இல்லாதவர்கள். கடைசியில் தியாகத்தை பற்றி பேசும் கிறிஸ்த்து. காந்தியத்துடன் இணையும் ஒரு புள்ளி.

அன்னா, புகாரினின் மனைவி.இரண்டு நாடகங்கள் மூலம் அவளது கதை. தல்ஸ்தோய் பற்றி ஒரு நாடகம். 

பல சித்தாந்த விவாதங்கள் எல்லாம் சுவாரஸ்யமானவை. குறிப்பாக எனக்கு யாரோ மேடை மீது ஏறி நின்று பேசுவது போல தோன்றவில்லை. ஒரு உரையாடலாகவே தோன்றியது. மானிட அறம், அரசியல் அறம் பற்றி பல விவாதங்கள். ரஷ்யாவில் கம்யூனிசத்தின் பெயரால் பல கொலைகள் நடந்து கொண்டிருக்கும் போதுன் இங்கு ரஷ்யாவில் பொன்னுலகின் கட்டுமானம் நடக்கின்றது என்று தெரிந்தே மக்களை ஏமாற்றியவர்கள், உண்மை ரஷ்யாவிலிருந்து வந்த பின்னும் அவர்கள் முன்னர் அவர்கள் அளந்துவிட்ட பொய்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு அளிக்கும் பதிலென்ன? கம்யூனிஸம் கண்ட புரட்சி என்பதெல்லாம் இனி நடக்காத கதை, மிஞ்சி மிஞ்சி போனால் பிரபுவுடன் சேர்ந்து புரட்சி போராட்டம் செய்யலாம். இருந்தும் இன்றும் அக்கதை சொல்லி ஏமாற்றுபவர்களை என்ன செய்ய. 

எதையும் சித்தாந்தத்தின் படி நியாயாமாக்கிவிட முடியும். தர்க்கம். தர்க்கரீதியாக எப்படியாவது ஒன்றை உண்மை என்று நிறுவிவிடலாம். ஸ்டாலின் செய்த கொலைகளுக்கும், அவர் தரப்பில் ஒரு நியாயம், தர்க்கம் அமைந்திருக்கின்றது. 

அருணாச்சலத்தின் மனபிறழ்வு காட்சிகள், அந்த அபத்த நாடகம். கதையில் மிக வேகமான பகுதி. அனைத்தையும் வேடிக்கையாக்கி, அதனூடாக பல தகவல்களை சொல்கின்றது. கம்யூனிஸ்டுகளுக்கும் பிடிக்கலாம், பிராமணர்களை பல இடங்களில் கிண்டல் செய்கின்றது. அது ஒன்று போதுமல்லவா?

பல இடங்களில் அவரின் குசும்பு எட்டி பார்க்கின்றது. "பிள்ளைமாருங்க உளுந்த கஞ்சி குடிச்சாலே போதும்", "திகசி எப்படி பழக்கம், கார்டு போடுவாருங்க, 86 கார்டு போட்டிருக்காரு. அத்தன கவித எழுதியிருக்கீங்களா? அவ்வளவுதாங்க பிரசுரமாகியிருக்கு"

தொழிலாளர்களுக்கு உரிமையை பெற்று தர உண்டான சங்கத்தின் நோக்கம் இன்றும் அப்படியே இருக்கின்றதா? ஒரு தொழிலாளிக்கு வக்கீல் வேலை செய்வது மட்டும்தான் சங்கமா? தொழிலாளிகள் வேறு சங்கங்களுக்கு போவதை தடுக்க நினைக்கும் தலைவர்கள், சங்கத்திற்குள்ளும் மறைமுகமாக உள்ளோடும் சாதி அரசியல், எதிர்கால கணக்கைவிட, தொழிலாளர்களை தக்க வைத்து கொள்வதே முக்கியம் என்று நினைத்து எடுக்கும் முடிவுகள், தெரிந்தே தொழிலாளர்களின் தவறுகளை ஆதரிப்பது என்று நடக்கும் சங்களின் அடிப்படை என்ன? 

புரட்சி, போராட்டம் எது என்றாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவிகள். அவர்களுக்கு என்ன மதிப்பு? அப்பாவிகளுடன் சேர்த்து நினைக்கப்பட வேண்டிய ஜீவன்கள், போர்வீரர்கள். ஒரு மாபெரும் இயந்திரத்தின் ஒரு பகுதியாக எதற்காக செய்கின்றோம் என்பது கூட தெரியாமல், இயக்கப்படும் ஒரு சிறிய இயந்திர துண்டு. செம்படை வீரனுக்கு பொன்னுலக கனவு என்பது ஒரு கானல் நீரென்று அறியும் போதும், புரட்சியின் தோல்வி கண்முன் நிகழும் போது அவனின் உழைப்பிற்கு என்ன மரியாதை, விட்ட உயிர்களுக்கு என்ன மதிப்பு. வரலாற்றிற்கும் தனி மனிதனுக்கும் என்ன தொடர்பு, வரலாற்றின் வழி மனிதன் செல்கின்றானா? வரலற்றை அவன் உருவாக்குகின்றானா?

அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன் என்ன செய்யக்கூடும்?

பல கேள்விகள்.

பல நாட்களாக ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பிலிருந்து மாறி, இப்போது இங்கே கிடைக்கின்றது. விலை ஐநாக்ஸில் முதல் நாள் ரஜினி பட டிக்கெட் விலையை விட கொஞ்சம் குறைவுதான்.

Wednesday, July 23, 2014

பிளேட்டோவின் முட்டை

அன்புள்ள ஜெயமோகன் சார்,
“பிளாடோவின் ரிபப்ளிக்” பற்றிய தங்களின் ஆணித்தரமான கருத்து ரிபப்ளிக்கோ கோழி தானே? :)
பதிலில் உள்ள subtle நகைச்சுவையை ரசித்தேன். நன்றி.
“பின் தொடரும் நிழல்” நான் கிட்டத்தட்ட தினமும் மீண்டும் மீண்டும் வாசிக்கும் நாவல். அதன் முடிவில் ஆறு நதியாவதை (உங்கள் முதல் சிறுகதை போலவே) சொல்லி இருப்பீர்கள். இதுவும் ஒரு subtle ஆன விஷயம். அதற்காக சொன்னேன்.
நன்றிகளுடன்,
கிருஷ்ணன் ரவிக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்
வரலாற்றுக்குப்பையில் விரியும் முட்டைகளே பெரும்பாலான சர்வாதிகாரத்தனமான கருத்துக்கள். சமூகத்தை அறிவுஜீவி மாற்றியமைத்துவிடலாமென்ற கனவு பிளேட்டோவால் முதலில் வரலாற்றுக்குப்பையில் போடப்பட்ட முட்டை
ஜெ

Sunday, July 20, 2014

குசேலன்

எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன்.  ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம்.  புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.  (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும்.  Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று.  Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது.  இவை முக்கியமான மாற்றங்கள்.)

நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்:
  • அதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன.
  • மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும்.
  • புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது.  கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது.  இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன.  காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக்க முடியும்.
  • இரவில் தூக்கமில்லாது இருக்கும்போது வரும் எண்ணங்கள்தாம் எத்தனை அபாயகரமானவை.  ஒருவனைத் தன்னையே முற்றிலும் மறுதலிக்க வைப்பவை.  எதிரியினுடைய எண்ணங்கள் ஏதோ மந்திரசக்தியால் தனக்குள் குடியேறியதுபோல.
  • ஸ்டாலின் சொன்னது மாதிரி ஒரு மனிதர் செத்தா அது துக்கம்.  ஒரு கோடி பேர் செத்தா அது புள்ளி விவரம்.  உண்மைதான் தோழர், ஒரு கோடி துக்கம்னு அதைப் பிரிச்சுப் பாக்க ஆரம்பிச்சா இந்த பூமி துக்கம் தாளாம வெடிச்சிடும்.
  • மனம் பெரிய கல்குண்டு போல கனத்தது.  இறக்கி வைக்க முடியாத பாரம்.  ஏதாவது பேச வேண்டும்.  பேசாதபோது மனதை அணுவணுவாக சுமக்க வேண்டியுள்ளது.  பேச்சு மனதை ஒலியாலான ஒரு திரையால் மூடிவிடுகிறது.
  • மனுஷ மனசில அகங்கார வெஷம் ஏறிப்போன பிறகு மருந்து இல்ல.  தானா பழுத்து எறங்கித் தணியணும் கேட்டுதா?
  • ஒருவேளை அந்தரங்கமான எண்ணங்களெல்லாம் சுயமையம் கொண்ட, அபத்தமான எண்ணங்களாகவே இருக்கும் போலும்.
  • உயிரோடு இருக்கிறவங்களுக்கு இறந்து போனவங்களுக்க கிட்ட ஒரு கடன் இருக்கு.  அவங்க செய்த தியாகங்கள் மேலதான் நம்ம வாழ்க்கை.  அவங்க விதைச்சதை நாம அறுவடை செய்றோம்.
  • ஆம்பிளயளுக்கு என்னமாம் ஒண்ணு இருக்கும் எப்பமும், துரத்திப் பிடிக்கிறதுக்கு.  அதில் உள்ள ஜெயம்தான் அவியளுக்கு முக்கியம்.  பெண்டுபிள்ளியள் அதுக்குப் பிறவுதான்.
  • தன் சொந்தக் குடிமக்கள் மேல வன்முறையப் பிரயோகிக்காத, அவங்களில ஒரு பகுதியை ஒடுக்காத, ஒரு அரசாங்கம் சாத்தியமே இல்லை.
  • எந்த ஒரு சமூகமும் இறந்தகாலத்தை முழுக்க நிராகரிக்கிறதில்லை.  அப்படியே ஏத்துக்கிறதுமில்லை.  தன் நிகழ்காலத் தேவைக்காக வரலாற்றை வேகவச்சு, உலர்த்தி, தூளாக்கி, தனித்தனி பாட்டில்களில் அடைச்சு, பத்திரமா பாதுகாக்குது.  வரலாறு சமூகத்துக்குக் குறியீடுகளின் களஞ்சியம்; அவ்வளவுதான்.
  • பொதுமக்களுக்கு அறிவாளிகளையல்ல, வீரர்களையே வேண்டும்.
  • பொதுமக்களுக்கு அறிவாளிகள் மீது பயம்.  தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம்.  தங்களைவிட வித்தியாசமானவனாக இருக்கிறான் என்ற பயம்.  சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும், சில சமயம் ஏளனமாகவும், சில சமயம் மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.
  • ஆண்களின் பதவியோ, அழகோ, பணமோ, பெண்களை அதிகம் மயக்குவதில்லை.  பேச்சுதான்.  பேசிப்பேசியே ஒருவன் ஒரு பெண்ணின் கண்ணில் மன்மதனாகவும் நவாப் ஆகவும் மாறிவிட முடியும்.
  • எத்தனை தீவிரமான துக்கமாக இருப்பினும் ஒருவர் அழ ஆரம்பிக்கும்போது சற்று கோமாளி ஆகிவிடுகிறார்.  அழுகை நம்மை அவரிடமிருந்து உடனடியாக விலக்கி விடுகிறது.
  • காமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல.  நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஊர்தி அது.  அதில் வேகமூட்டி உண்டு.  ஆனால் நிறுத்தக்கருவி இல்லை.  எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும்.
  • காவிய முடிவுகள் காவியங்களுக்கு வெளியே ஒருபோதும் சாத்தியமாவதில்லை.  எனவேதான் காவியங்களின் தீவிரமோ முழுமையோ ஒழுங்கோ இல்லாமல் வாழ்க்கை வெளிறிக்கிடக்கிறது போலும்.  வாழ்வின் இந்தக் கூசிக் குறுக வைக்கும் அர்த்தமின்மையிலிருந்து தப்பி இளைப்பாறும் பொருட்டு மனிதன் உருவாக்கிக்கொண்டவையே காவியங்கள்.
  • குற்றவுணர்விலிருந்து எழும் கோபம் தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கும் முன்னிலை மனிதர்மீதுதான் உடைத்துப் பாயும்.
  • அர்த்தமற்றதும் உத்வேகம் நிரம்பியதுமான வெற்றுச் சொற்கள் தரும் மெய்மையின் தரிசனத்தை ஒழுங்குள்ள தருக்கம் ஒருபோதும் தருவதில்லை.
  • என் அனுபவத்தில் பசியை வெல்ல மிகச்சிறந்த வழி காமம் சார்ந்த பகற்கனவுகளில் அமிழ்வதும், உடல் சோர்ந்து நரம்புகள் வலிக்கும் வரை சுயபோகம் செய்வதும்தான்.
  • பசியின் மிகப் பெரிய கொடுமை நாம் வேறு எதைப்பற்றியும் உண்மையில் யோசிக்க முடியாது என்பதே.  அதன் முன் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம்.  ஆனால் அனைத்துமே அதற்கு எதிரான பாவனைகளாகவே இருக்கும்.
  • மனிதர்கள் அழுவதும் கோபம் கொள்வதும் எப்போதும் ஓர் இடைவெளியை நிரப்பத்தான்.  பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையேயான இடைவெளி.  சகலவிதமான பேச்சுகளும் தருக்கங்களும் நடப்பது அந்த வராண்டாவில் வைத்துதான்.
  • அகந்தையேகருணையின் விளைநிலம்.
  • குடிக்காமலிருப்பவர்கள் அறிவதில்லை நான் குடிக்காத போதும் குடிகாரன்தான் என.  குடிக்காமலிருக்கும் குடிகாரன்.  அவ்வளவுதான் வித்தியாசம்.
  • ஓர் இலக்கிய விமரிசகனாக வாழ்வைப் பார்க்கும்போது இப்படிச் சொல்லத் தோன்றுகிறது.  மிகமிக நீர்த்துப்போன படைப்பு.  தொண்ணூறு சதத்தை வெட்டி நீக்கிவிடவும்.  மிஞ்சியதில் சிற்சில பக்கங்கள் மட்டுமே முக்கியமானவை.  சில வரிகளில் மட்டுமே உத்வேகம் கூடியிருக்கிறது.
  • சூதாடியின் வாழ்வின் ஒரு கணத்தின் பாரத்தை சம்சாரி தாங்கமாட்டான்.  அவன் முதுகெலும்பு முறிந்துவிடும்.
  • ஆளுமை என்பது ஒரு எதிர்வினை மட்டுமே என்று அறிந்ததே தல்ஸ்தோயின் மெய்ஞானம்.  (ஆளுமை = personality; எதிர்வினை = reaction)
  • அச்சமில்லாத குதூகலம் முழுமையானதல்ல.
  • வெள்ளங்கள் வடியும், இளம்தோழரே.  இளமையில் அதை நாம் அறிவதில்லை.
  • அதிகாரமுள்ள கோழை மிகமிக ஆபத்தானவன்.
  • மனிதனுக்கு மனிதநாடகத்தில் எப்படியாவது பங்கெடுத்தாக வேண்டியுள்ளது.
  • எந்த நிலையிலும் மனிதனுக்கு எதிர்காலம் தேவையாக ஆகிறது.  தற்கொலைக்கு முந்தைய கணத்தில்கூட.
  • சமரசம் செய்துகொள்வதற்கு மிக அவசியமானது உரிய நியாயங்களைக் கண்டுபிடிக்கும் தருக்கத்திறன்.  எனவேதான் அறிஞர்களும் மேதைகளும் எளிதாக சமரசம் செய்துகொள்கிறார்கள்.
  • இளமைப்பருவ நினைவுகள் மனிதனிடமிருந்து பறிக்கவே முடியாத சொத்து.  அவை இருப்பது வரை மனிதர்கள் எங்கும் வாழ்ந்துவிட முடியும்.
  • நீதி என்பது ஒரு நடைமுறை அல்ல; ஒர் ஒழுங்கு அல்ல, ஒரு நம்பிக்கை அல்ல.  நீதி என்பது ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்துகொள்ள முடியாத ஓர் உணர்வு.
  • வரலாற்றில்தான் எத்தனை மாமனிதர்கள், தியாகிகள், புனிதர்கள்.  அவர்களையெல்லாம் புத்தகங்களாகவும் சிலைகளாகவும் மாற்றி அலமாரியில் வைத்துவிட்டுத்தான் மனிதர்கள் பூமியில் வாழ முடிகிறது.
  • அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்துகொண்டவர்கள்.
  • நரகத்தில் கொடும் துயரங்கள் உண்டு குழந்தை.  அதனால் அங்கு இறைவனும் இருப்பார்.  சொர்க்கத்தில் எல்லாவிதமான போகங்களும் உண்டு.  அங்கு சாத்தான் அப்போகங்கள் மீது நின்று பிரசங்கம் செய்வான்.  நீ எங்கே போக விரும்புகிறாய்?
  • ஞானமென்பது இதுதான்.  கற்சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச் சுவர்களாக மாற, உலகம் வெட்டவெளியாகும் நிலை.  அவ்வெட்டவெளியின் நடுவே தனிமையின் சிறையில் நாம் அடைபடுகிறோம்.
  • எப்போராட்டத்திலும் மிகப்பெரிய சக்தி நமது பக்கத்து நியாயத்தின்மீதான ஆழ்ந்த நம்பிக்கையேயாகும்.
  • உரிமைப் போராட்டம் எந்நிலையிலும் மீற முடியாத எல்லை ஒன்று உண்டு.  எந்த உரிமையை அடையும் பொருட்டு அது போராடுகிறதோ அந்த உரிமையை அது ஒருபோதும் பிறருக்கு, தன் எதிரிக்குக்கூட, மறுக்க முடியாது.
  • தருக்கபூர்வமானதெல்லாம் உண்மையென்றும், உரிய காரணங்கள் உடையதெல்லாம் நியாயம் என்றும் நம்புவதே அறிவைப் பேதைமையின் உச்சமாக ஆக்குகிறது.
  • இந்தப் பூமியில் பெரும் அநீதி நிகழாத கணம் ஒன்று இல்லை.  ஆனால் இன்னமும் அநீதியை இங்கு நியாயப்படுத்த முடியவில்லை.
  • பிறிதொருவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தன்னுயிரைத் தரத் தயாராயாகும் கோடானுகோடிப் புனிதமூடர்கள் இன்னும் இப்பூமியில் உள்ளனர்.  அவர்களுக்காகவே இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது.
  • கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன.
  • சித்தாந்தம்கிறது வரலாறு நோக்கி மனித மனம் விரியறதனால பிறக்கிறது இல்லை.  தன்னகங்காரம் நோக்கி சுருங்கிறதனால பிறக்கிறது.  எல்லா சித்தாந்தங்களும் ஒரு உண்மையை ஊதிப்பெருக்கி, மறு உண்மையை மிதிச்சு மண்ணுக்குள்ள அழுத்தித்தான் உண்டாக்கப்படுது.
  • “நீங்களும் சரி, அவுகளும் சரி.  மௌனமா இருக்கிறதுதான் உத்தமம்னு ஆயிரம் பக்கத்துக்கு புஸ்தகம் எழுதுவீக.  எனக்கு ஒண்ணும் புரியலை.”  “தெளிவு படுத்திக்கணும்ல?”  “பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுபடுத்திக்க முடியாது.  தெளிவு இருக்க இடத்தில பேச்சு இருக்காது.”
  • இலக்குகளை அடைந்ததும் வருவது வெறுமை.
  • தீர்க்கதரிசிகள்மீதும், வீரர்கள்மீதும், கவிஞர்கள்மீதும், அறிஞர்கள்மீதும் கவிந்துள்ள தனிமையின் பாரம் தான் அவர்களுடைய சாபம்.
  • எதிர்காலமே நமக்கு வாழ்வின் அர்த்தத்தைத் தர முடியும்.  இறந்தகாலம் பிரமைகளைத் தருகிறது.  நிகழ்காலம் பிம்பங்களைத் தருகிறது.  எதிர்காலம் நம்பிக்கையை, உத்வேகத்தைத் தருகிறது  http://kuselan.manki.in/2012/09/blog-post_5.html

ராஜினியின் விமர்சனம்

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்...... என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக...

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்... அதுவும் "பெண்களுக்கேயுரித்தான" தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்... அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை... அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை.துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
http://peddai.blogspot.in/2005/06/blog-post.html

கெ.ஆர்.அதியமான்

அன்புள்ள ஜெமோ,

பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய உங்கள் பதிவை ( http://jeyamohan.in/?p=97 )
இப்போதுதான் படித்தேன். அதை ஒட்டிய மடல் இது :
மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

///ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை இயல்பாகக்
கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின் மையம். அதை
எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து அளவுக்கே
முக்கியமான குரல்.////

சொத்துரிமை தான் முதலாளித்துவத்தின் ஆணிவேர். பல வகை
அடிப்படை உரிமைகளில் சொத்துரிமை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத உள்ளேன். மார்க்ஸிச‌த்தை எந்த‌ '
முறையில்' அம‌ல்ப‌டுத்தினாலும், அடிப்ப‌டை சொத்துரிமையை ந‌சுக்காம‌ல்
செய‌ல்ப‌டுத‌ முடியாது. சொத்துரிமையை ந‌சுக்கும் போது இத‌ர‌ ம‌னித‌
உரிமை மீற‌ல்க‌ள் மிக‌ இய‌ல்பாக‌ ந‌சுக்க‌ப‌டும். அதை த‌விர்க்க‌வே
முடியாது. செம்புரட்சிக்கு பின் ஸ்டாலின்ஸ‌ம் உருவாகுவ‌தை
த‌விர்க்க‌வே முடியாது.

அலெக்ஸான்ட‌ர் சோல்ஸ்சென்ன்ஸின் (Aleksandr Solzhenitsyn)
சொல‌வ‌து :

..he blamed the teachings of Karl Marx and Friedrich Engels, arguing
Marxism itself is violent. His conclusion is Communism will ALWAYS be
totalitarian and violent, wherever it is practiced. There was nothing special
in the Russian conditions which affected the outcome...
He also rejected the view that Stalin created the totalitarian state, while
Lenin (and Trotsky) had been "true communists." He argued Lenin started
the mass executions, wrecked the economy, founded the Cheka which would
later be turned into the KGB, and started the Gulag even though it did not have
the same name at that time.
இந்த‌ அம்ச‌ம் மார்கிஸ‌த்தின் அடிப்ப‌டை கூறுக‌ளிலேயே உள்ள‌து.
என‌வே ஸ்தாலிய‌த்தை உருவாக்க‌ சாத்திய‌மில்லாத‌ ஒரு
மார்க்ஸிச‌ம் சாத்திய‌மே இல்லை.

சொத்துரிமையும் அற‌விய‌லும் ப‌ற்றி மிக‌ முக்கிய‌ ப‌திவு :
"HUMAN RIGHTS" AS PROPERTY RIGHTS
http://www.mises.org/rothbard/ethics/fifteen.asp
The Ethics and Economics of Private Property
http://www.mises.org/story/1646
அன்புடன்
K.R.அதியமான்
-----------------------------

...ஒரு படைப்பு வாசகனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனை
பேர் எத்தனை முறை வாசிக்கிறார்களோ அத்தனைமுறை அது புதிதாகப்
பிறக்கிறது. சோதிப் பிரகாசம் அவர்களின் வாசிப்பு என்நூலில் இருந்து
அவர் பெற்றுக் கொண்டது. அதை சரி அல்லது தவறு என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை. அவர் கணக்கிலெடுக்கத் தவறிய விஷயங்களை,
அவர் பார்க்காத கோணங்களை சகவாசகனாக நான் சுட்டிக் காட்டலாம்.
படைப்பாளி கூட படைப்புக்கு ஒரு வாசகனே. இனி நான் எதை
சொன்னாலும் அது அந்நாவலின் பகுதி அல்ல. அது முடிந்துவிட்டது.
[விஷ்ணுபுரத்தில் புதிதாக எழுதிச் சேர்க்கப்படவில்லை]

என் நோக்கில் அந்நாவலில் மார்க்ஸியத்தையும் ஸ்தாலினியத்தையும்
துல்லியமாக வேறுபடுத்திப் பார்த்திருப்பதாகவே படுகிறது. அப்படி
வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல்
என்று சொல்லிவிடவும் முடியாது. அது ஸ்தாலினிய எதிர்ப்பு நாவலே.
ஆனால் ஸ்தாலினின் தரப்புகூட வலிமையாகவே சொல்லப்படுகிறது.
அதில் ஒற்றைப்படையாகக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இல்லை.
எல்லா கருத்தும் ஒரு விவாதத்தன்மையுடன்தான் வருகின்றன.
ஆகவே எல்லா கருத்தும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சில தரப்புகள்
தன்னிச்சையான உக்கிரத்துடன் நிகழ்ந்துள்ளன. எஸ்.எம்.ராமசாமி
சொல்லும் மாறாப்பேரறம் குறித்த தரப்பு அதில் ஒன்று. அதற்குச்
சமானமான வலிமையுடன் வருவது ஜோணி என்ற கதாபாத்திரத்தால்
முன்வைக்கப்படும் எதிர்கால மார்க்ஸியம் குறித்த பெருங்கனவு.
அந்நாவல் மார்க்ஸியத்தின் அழிவைப் பற்றி பேசவில்லை, அதன்
மறுபிறப்பைப் பற்றிப் பேசுகிறது

மார்க்சியம் ஸ்தாலினியமல்ல. ஆனால் அது ஸ்தாலினியத்தை
முளைக்கவைத்தது. அரை நூற்றாண்டு காலம் அதை நியாயப்படுத்தும்
கருத்தியல் சட்டகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை எவருமே மறுக்க
இயலாது. பின்தொடரும் நிழலின் குரலின் முக்கியமான வினாவே
அங்குதான் உள்ளது. சில எல்லைகளை நாம் ஒருபோதும்
மீறமுடியாது என எண்ணுகிறோம், சிலவற்றை கற்பனைகூட
செய்யமுடியாது என நம்புகிறோம். ஆனால் உரியமுறையில்
நியாயப்படுத்தப்பட்டால் மனிதன் எதையும் செய்வான் என்றுதான்
வரலாறு நிரூபித்துள்ளது. நாஜி வதைமுகாம்களை நடத்தியவர்கள்
மனிதர்களே. அவர்களுக்கு அவர்கள் செயல் நியாயமாக,
இன்றியமையாததாகப் பட்டது. ஆகவே மனிதன் கருத்தியல்மீது
மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்பதே நாம் இருபதாம்
நூற்றாண்டில் கற்றுக் கொண்ட பாடம். கருத்தியல் எந்த அளவுக்கு
வலிமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலும் கவனமாக இருக்கவேண்டும். எந்த அளவுக்கு முற்போக்காக,
எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலதிகக்கவனம் தேவை. தர்க்கமல்ல, மனசாட்சியே நம்
அளவுகோல்களைத் தீர்மானிக்கவேண்டும். புத்தியல்ல கனிவே
நம்மை வழிநடத்தவேண்டும். அந்நாவலில் உள்ளதாக எனக்குப்
படுவது இதுவே.

இதுவே பின் தொடரும் நிழலின் குரல் பேசும் விஷயம்.
அதைப்பேசும்பொருட்டு இக்காலகட்டத்தில் மிக வலிமையனதாக
இருந்த ஒரு கருத்தியலான மார்க்ஸியம் உதாரணமாக்கப்பட்டுள்ளது,
அவ்வளவுதான். அதன் பிரச்சினை அறத்துக்கும் தர்க்கத்துக்கும்
இடையேயான முரண்பாடு குறித்ததே. மார்க்ஸியமா ஸ்தாலினியமா
என்பதல்ல அதன் சிக்கல். எப்படி ஸ்தாலினியத்தையும் போல்பாட்டின்
கொடூரங்களையும் மகத்தான மனிதாபிமானிகளாக இருந்தவர்கள்
கூட பலவருடம் நியாயப்படுத்தினார்கள் என்பதுதான். [இன்னும்
சொல்லப்போனால் இ.எம்.எஸ் என்ற மேதை, பெருங்கருணையாளன்
எப்படி அதைச்செய்தான் என்பதே என் தனிப்பட்ட சிக்கல்]. 

எப்படிஎந்த ஒரு இலட்சியவாதமும் ஸ்தாலினியம் போன்ற வன்முறைக்களத்தை
உருவாக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அதன் இலக்கு. இலட்சியவாதம்
எதிர்நிலை நோக்குகளை வன்முறையை உருவாக்குமென்றால் அது
மெல்ல தன்னை வன்முறைக்குப் பலிதந்துவிடும் என்பதே. வன்முறைக்கு
அதற்கே உரிய இலக்கணமும் வழிமுறையும் உண்டு என்பதே.
அவ்வகையில்தன் ஆத்மாவின் ஆழத்திலிருந்து பின் தொடரும் நிழலின்
குரலின் வரிகளை வாசித்த பலநூறு ஈழவாசகர்களை நான் அறிவேன்.
ஸ்தாலினியம் தவறாயிற்று என இன்று சாதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் கொல்லப்பட்ட உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களை மீட்டெடுக்க
இயலுமா என்பதே அந்நாவல் எழுப்பும் வினா. 

வன்முறை எங்கு எப்படிநிகழ்ந்தாலும் இந்த அபாயம் உள்ளது. அதை நிகழ்த்தும்போது உள்ள
நியாயங்கள் மாறலாம். நிகழ்ந்தவற்றைச் சரிசெய்ய இயலாது. அப்படியானால்
தியாகங்களுக்கு மதிப்பே இல்லையா? போல்ஷெவிக் புரட்சியில்
இறந்துபோனவர்களின் மரணம் வரலாற்றின் கேலிக்கூத்துதானா? [அதே
வினாவை அப்படியே ஈழத்தைப் பற்றியும் எழுப்பலாம். என்றாவது
அவ்வினா எழுந்துவரும், மிகவலிமையாக. அப்போது என் நாவல்
எதைப்பற்றியதென்ற கேள்விக்கே இடமிருக்காது]. அக்கேள்விக்கே
கிறிஸ்து வந்து பதில் சொல்கிறார்- திருச்சபையின் கிறிஸ்து அல்ல
படைப்பின் ஆன்மாவில் விளைந்த கிறிஸ்து.

ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை
இயல்பாகக் கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின்
மையம். அதை எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து
அளவுக்கே முக்கியமான குரல்.

ஜெ

ரா கிரிதரன்

பெர்லின் சுவர் - பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்

பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் கடந்து விட்டன. மீதமிருக்கும் கற்கள், இன்றும் குறியீடாக மாறாமல், பாதையில் முளைத்த முட்செடிகளாய் ஆங்காங்கே பார்வைக்காக நிற்கிறது. Check Point Charlie என்ற கண்ணுக்குத் தெரியாத சீலையே உண்மையான சுவர். கைகளில் ஒன்றுமில்லாவிட்டாலும், லட்சியம் நிறைந்த வாழ்வை கனவு கண்ட கிழக்குப் பகுதி. அங்கிருந்து தப்ப நினைத்தவர்களின் நிலை பல டெர்ரா பைட்டுகள் நிரம்பும் அவலக் கதை. பொருளாதாரம், உறவு, எதிர்கால திட்டம் என அனைவரும் ஒரே வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். அந்தந்த நொடிக்கு வாழ்வை அனுபவிக்கும் மேற்குப்பகுதி; செழிப்பான வியாபார உலகம். அதை அடைய முற்பட்ட கிழக்குப் பகுதி மக்கள் ஐம்பது ஆண்டுகளாய் சொந்த வாழ்வை இழந்த சோகம், அடுத்த தலைமுறையினருக்கேனும் கிடைக்கப்போகும் செழிப்பான வாழ்வை கனவில் மட்டும் கண்ட திணிக்கப்பட்ட வாழ்வுமுறை.
இன்று, கண்ணுக்குத் தெரியாத வகையில் U2 குழுவினர் , MTV குழுவுடன் எழுப்பிய சுவர் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது (1989இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போது Leonard Bernstein பீத்தோவனின் Ode to Joy இசையை Ode to Freedom என மாற்றி அமைத்தார்).ஒரு விதத்தில் இது சரிதான். வரலாற்றுக்கு தனி அர்த்தத்தைத் தேடிக் கொடுக்கும் செயல். reversal என்ற வகையில், பெர்லின் சுவர் இருந்த Brandenburg வாசலை பரிகாசம் செய்ய வேண்டிய தருணம். இதுவரை பெர்லின் சுவர் என்ற வஸ்து கொடுத்த அர்த்தத்தை புரட்டிப் பார்க்க முடியும். பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டதால் எழுச்சி கொண்ட கருப்பின மக்கள், கருப்பின் அர்த்தத்தை மாற்றிய கதை - இதற்கு ஒரு வழிகாட்டி.
இந்த இருபது வருடங்களாய் சுவருடன் வீழ்ந்தது கம்யூனிசம் என கூப்பாடு போட்டவர்களை என்ன என்று சொல்வது? கண்ணகி சிலையை மீண்டும் நிறுவியதின் மூலம் தமிழ்ப்பற்றை பறைசாற்றியதாய் அறிவித்தவர்களின் நிலையுடன் இதை ஒப்பிடலாம். தத்துவங்களின் செயல்பாடுகள் தோற்கலாம்; தத்துவம் அர்த்தமிழக்குமா? தத்துவத்திற்காகவே வாழ்வைத் தியாகம் செய்தவர்களின் நிலை என்ன? அவற்றின் அர்த்தம் என்ன?
இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் தேட முயன்றிருக்கிறார் ஜெயமோகன்.
இதற்காகவே ‘பின் தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை மீண்டும் படித்தேன். கம்யூனிஸம் என்ற வார்த்தைக்கு பதில் வேறெந்த தத்துவத்தையும் இதில் நிரப்பலாம். அப்போதும் இந்த புத்தகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.
*
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரென்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
இவ்விரண்டு குறள்களும் தியான மந்திரங்களாக மாறி வரலாறு, அரசியல் கொண்ட புனைவை பின் தொடரும் நிழலின் குரலாக சித்தரிப்பதாய் ஜெயமோகன் கூறுகிறார்.இது ரஷ்ய கம்யூனிஸ வரலாற்றின் பின்னணியில் தியாகத்தின் அர்த்தத்தைத் தேட முயலும் ஒரு படைப்பாகும். பின் தொடரும் நிழலை மறுபடி படித்தவும் எனக்குத் தோன்றியவை இவை.
வரலாற்று ஆவணங்கள் நாம் நிற்கும் திசையில் நம்மைக் கடந்து செல்லும் ஆறின் பகுதி மட்டுமே. சில சம்பவங்களின் தொகுப்பைக் கொண்டு வரலாற்றின் பாய்ச்சலை நிறுவும் வீர செயலைத்தான் எல்லா வரலாற்றாசிரியனும் செய்து வருகின்றான். தர்க்க அடிப்படையில் மனிதர்களுக்கான அறம் இதுதான் என பேச முற்படுகையில் வரலாற்றின் காலகட்டத்தையும் பொருட்படுத்த வேண்டியிருக்கிறது.
புகாரின் ஸ்டாலினின் வலது கரமாக செயல்பட்டு 1920 களில் லெனினுக்குப் பிறகு கம்யூனிஸக் கொள்கைகளை நிறுவனமாக மாற்ற செயல்படுகிறார். ஸ்டாலினின் ஆடுபுலி ஆட்டத்தைத் தெரிந்துகொண்டே ஒரு பகடைக்காயாக மாறுகிறார். தனக்கும் செக்மேட் வைக்கப்படும் எனத் தெரிந்தும் ட்ராட்ஸ்கியை நாடு கடத்துகிறார். தன் அறம், பிறர் அறம் என பொலிட்பியூரோவிற்குள் பேசுகிறார். அப்போதைய வழக்கப்படி பொய் வழக்குகளில் சிறை தண்டனைப் பெற்று தன் கடைசி தினங்களை வதை முகாமில் கழிக்கிறார். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு கோர்பசேவின் அரசு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. புகாரின் சொன்ன வாக்குமூலத்தை ஐம்பது வருடங்களாக தினமும் முணுமுணுத்து வந்த அவர் மனைவி அன்னா, கூண்டிலேறி உண்மையை நிறுவுகிறார்.
ரஷ்ய 1917 அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த புகாரினுக்கு நடந்த கதை இது.
வரலாற்றின் திரிபுகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதோர் இருந்த பழைய கம்யூனிஸ்டுகள் காலமது.ஜெயமோகனின் கதைகளத்தில் புகாரினின் பொய் வழக்கு, வீரபத்ரபிள்ளை என்ற இந்திய கம்யூனிஸ்டுக்கு கடிதமாக வந்து சேர்கிறது. அவரும் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த கதையைத் தொடரத் தொடங்க மற்றொரு புகாரினாக மாறுகிறார். இவர் கதையை பல வருடங்களுக்குப் பிறகு தொடரும் அருணாசலம் என்ற ஸ்டாலினிஸ்ட் வழியாக ஜெயமோகன் சொல்கிறார்.
பலவிதங்களில் இந்த நாவல் தமிழின் முக்கியமான படைப்பாகிறது.
மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட கதைகளம். நம் நாட்டில் வரலாறு, அரசியல் பற்றி பலவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன. அரசியல் என்றாலே சாக்கடை என்ற க்ளீஷேக்களிலிருந்து, அதன் பன்முகத்தை வரையறுக்கும் விமர்சனங்கள் வரை இந்த கண்ணோட்டங்கள் மாறுபடும்.இதைப் போலவே இந்த நாவலில் வரும் பாத்திரங்களும் பலவிதமானவை. தீர்க்கமான சில அடிப்படை கற்பிதங்களை உடைய பல சித்தாந்தவாதிகள், அருணாச்சலம் போல் செயல்வீரனாகவும் சித்தாந்தியாகவும் உள்ள சில பாத்திரங்கள் என முரண்பாடுகள் கடைசி வரைத் தொடர்கிறது.
நாவல் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி - கம்யூனிஸம் அழிந்து விட்டது. ஆனால் பல மனிதர்களின் தியாகங்களில் கட்டப்பட்ட இந்த தர்க்க சித்தாந்தம் இன்று எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது? சோஷலிஸ உலகம் என்ற கனவு உடைபட்டு விட்டது. ஆனால், இதைத் தொடர்ந்த மனிதர்களின் தியாகங்களுக்கு பதில் என்ன?
மிக ஆழமான, விரிவான பதில்களுக்கு தயாராகும் அதே நேரத்தில், இவை அனைத்தும் நேர விரயம் என்பதும் தோன்றாமலில்லை. இந்த இரு முடிவுகளும் மாறி மாறி நமக்குத் தோன்றிக்கொண்டிருக்கின்றன. யேசுவைப் போல் தியாகம் செய்தாலும் மூன்று நாட்களில் மறுபடி உதயமாகி உண்மையை உலகுக்கு உணர்த்தலாம். இது தான் தியாகத்தின் உச்சகட்ட பதிலா?
அறம், தியாகம் போன்றவை திசைக்கொன்று போல் மாறிக்கொண்டிருக்கும் பறவை. உயர பறக்கும் கொடியைப் போல் திசை மாறினால், இதன் புத்தியும் மாறிவிடுமா? நிகழ் காலத்து தராசைக் கொண்டு, கடந்த காலத்து நிகழ்வுகளை எடை பார்க்க முடியுமா? இவை எவ்விதமான அபத்தமான விளைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்? இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கையில் நாம் சுலபமாக அறம்,தியாகம் போன்றவற்றை புறம் தள்ள முடியும். தேவையில்லாத கனம் போல் தோன்றினாலும், வரலாற்றை கணிக்கும் கருவியாக  இவை நமக்கு இருக்குமா? அப்படிபட்ட தராசே தேவையில்லை என்றால் வரலாறு என்ற ஒரு வஸ்து எதற்கு?
வெற்றியாளர்களால் பிண்ணப்படும் போர்வை என வரலாற்றை ஒதுக்க முடியாது. பல ஆவணங்களிலும், தொகுப்புகளிலும் நமக்கு கிடைக்கும் கண்ணோட்டங்களை வரையறுக்கலாம். மனிதர்களாக நாம் இவற்றை பார்வையாளனாகவோ, நிகழ்த்தும் கருவிகளாகவோ மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவு சரியாக இருக்குமா?
எந்த காலகட்டத்திலும் அரசியல் சகுனிகளும், தலைவர்களும் தங்களின் கூர்மையான தந்திர மூளையால் வரலாற்றை ஏமாற்ற புதுப்புது  யுத்திகளைக் கண்டு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டாலின் புகைப்படக் கலையை சாதகமாகப் பயன்படுத்தி, பல தலைவர்களை ரஷ்யாவில் இல்லாமல் செய்திருக்கிறார். தன் வாழ்நாளில் இவை வெளிவராமலிருக்க ஜப்பானைப் போல் மாய உலகைச் சித்தரித்தார்.ட்ராட்ஸ்கி, புகாரின் போன்ற மென்ஷ்விக்குகள் பலரை நாடு கடத்தியிருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டனர்.
1989ல் பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட போது இந்த கற்பனை உலகமும் பலருள் சிதறியது. இந்த வருடம் கம்யூனிஸம் வீழ்ந்து இருபது வருடங்களாகிறது. இப்படித்தான் ஊடகங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் பதியப்படும். இது சரியானதா?
கம்யூனிஸம் என்ற அரசியல்/வாழ்வு முறையை பின்பற்றிய நாடு வீழ்ந்தால், கம்யூனிஸம் என்ற சித்தாந்தமே வீழ்ந்ததுபோலாகுமா? சித்தாந்தம் என்பது கடவுள்,உண்மை என்பவைப் போல் நிதர்சனமான ஒன்றில்லையா? கம்யூனிஸம் என்பது மார்க்ஸ்,ஏங்கள்ஸின் சித்தாந்தமல்லவா; ரஷ்யா அதை நடைமுறைபடுத்தப்பட்ட முயன்ற நாடு; ஸ்டாலின்,லெனின் போன்றோர் அதன் கருவியல்லவா? இவர்கள் உபயோகித்த வழிமுறைகளில் தவறிருக்கலாம். அதனால் சித்தாந்தம் ஆட்டம் காணுமா?
ஒரு சமூக இயக்கத்தை வழி நடத்த பல முறைகள் இருந்து வந்திருக்கின்றன. எந்த இயக்கமானாலும் மாற்று கருத்துக்கும், மக்கள் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும். அப்படி இருக்கும் இயக்கங்கள் மட்டுமே கொஞ்சமாவது உயிரோடு இருந்திருக்கின்றன. குடியரசு முறையில் தேர்தல் feedback forum. அப்படிபட்ட கருத்து சுதந்திரமில்லாதது கம்யூனிஸத்தின் அடிப்படை பிரச்சனையாக இருந்திருக்கிறது. மையத்தை தகர்க்கும் இயக்கத்தில் மையத்துக்கே முக்கியத்துவம் அதிகமானது கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய முரண்.
இந்த இருபது வருடங்களில் இப்படிப்பட்ட பல கருத்துகள் ஊடகங்களிலும், புத்தகங்களிலும் வெளி வந்திருக்கின்றன. சித்தாந்தத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும், கூட்டாட்சி என்ற இயக்க முறை கையோங்கியே இருக்கிறது.
ஒரு புனைவு வாசகர்களை சிந்திக்க வைப்பதோடு பல சாத்தியக்கூறுகளுக்குள்ளும் இட்டுச் செல்லவேண்டும். இப்படிபட்ட பல முக்கியமான கேள்விகளை முன்வைக்கும் மிக அற்புதமான அரசியல், வாழ்வு சம்பந்தமான அனுபவமாக இந்த புத்தகத்தை ரசிக்கலாம்.

ஐ சிவக்குமார் விமர்சனம்

தமிழகத்தில் சோவியத்தின் தகர்வுக்குப் பின்னால் கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சங்கத்தின் வரலாற்றை இந்நாவல் பதிவு செய்கிறது. நாவலின் மையப் பாத்திரமான அருணாசலம் தொழிற்சங்கச் செயலராய் இருக்கிறான். இவன் ஸ்டாலினிசத்தைத் தன்னுடைய நெறியாகப் பின்பற்றுகிறான். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தொழிற்சங்கத்தில் பணிபுரிந்த வரும் நல்ல வாசிப்பாளரு மான வீரபத்திரன் எம்.ஏ. பற்றிக் கேள்விப்படுகிறான். அவர் தொழிற் சங்கத்தினரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒரு சந்தை வீதியில் பசியால் உழன்று இறந்துபோன தகவலை ஆறுமுகம் அறிகிறான். வீரபத்திரன் பற்றிக் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர். எஸ்.கே.எஸ். போன்ற தலைவர்கள் அவரைப் பற்றிய ஆவணங்களையே இல்லாமலாக்குகின்றனர்.
ஆறுமுகம் வீரபத்திரனைப் பற்றிய தேடலின் மூலமாக அவருடைய எழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கிறான். அப்போது தான் வீரபத்திரன் ட்ராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களின் பக்கம் இருந்துகொண்டு ஸ்டாலினை விமர்சித்தவர் என்பதை அறிகிறான். ஸ்டாலினை விமர்சித்ததனாலேயே பலரின் தாக்குதலுக்கும் ஆளானார் என்ற தகவலும் கிடைக்கிறது. புகாரின் வாழ்வைப் படிப்பதனால் வீரபத்திரன் அடைந்த குழப்பம், ரஷ்யா மீது அவரடைந்த அதிருப்தி, மனித வாழ்வின்மீது அவருடைய பரிதாபம் எல்லாம் ஆறுமுகத்தையும் தொற்றிக்கொள்கிறது. இந்தச் சமயத்தில் தமிழக மார்க்சிய, எதிர் மார்க்சியம் குறித்து ஞானி, சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலானோர் நாவலின் இடை யிடையே வந்து மார்க்சியம் குறித்து விவாதிக்கின்றனர். இந்தத் தளங்களில் பேசப்படும் விவாதங்களும் வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து கதைத் தலைவனைப் பைத்தியமாக்குகின்றன. சில வருடங்கள் மனநிலைக் காப்பகத்தில் இருக்கிறான். பின்னர் ஓரளவு கருத்து ‘தெளிவு’ கொண்டபின்னர் தன் மனைவியுடன் கோவிலுக்குச் சென்று சிவலிங்க தரிசனம் பெறுகிறார். பின்னரே அவன் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுவதாக நாவல் முடிகிறது.
 ஜெயமோகன் இந்நாவலில் மார்க்சியத்துக்கு எதிரான விவாதங்கள் மூலம் மார்க்சியக் குறைப்பாட்டைப் புலப்படுத்தி ஆன்மீகத்தை வலிந்து நிலைப்படுத்துகிறார். மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் ஸ்டாலின் மற்றும் மார்க்சியம் குறித்துச் சித்திரித்த கருத்துகளை உள்வாங்கி, வாசகனை ஈர்க்கும் மொழி தலுடன் ஜெயமோகன் நாவலை உருவாக்கியுள்ளார்.
மே 1937ஆம் ஆண்டு ஜான் டெவே தலைமையில் அமெரிக்கா வில் உள்ள ட்ராட்ஸ்கியவாதிகள் டெவே குழுவை அமைத்தனர். இதன் பணி ட்ராட்ஸ்கி புனிதமானவர் என்பதை நிறுவுவதாகும். இக்குழுவின் அறிக்கைகளைக்கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல் எனும் கருதுகோளும் உண்டு. ஜெயமோகன் ரஷ்யா, ஸ்டாலின் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றையே மார்க்சிய மாகச் சித்திரிக் கிறார். ரஷ்யா மற்றும் ஸ்டாலின் மூலம் மார்க்சியத்தின் வீழ்ச்சியையும் அதிகாரத்தையும் நிறுவிச் சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் ‘முக்தி’ மார்க்கத்தை ஜெயமோகன் தீர்வாகக் கூறியுள்ளார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12226:---1999&catid=1237:2010&Itemid=499